யூடியூப் சேனல்களிடம் 1 கோடி கேட்கும் அதிமுக ஜெயராமன்... வழக்கு போட்டு அதிரடி; காரணம் இதுதானாம்!!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களிடம் நஷ்ட ஈடு கோரி அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பொள்ளாச்சியில், கடந்த 2019 ம் ஆண்டு கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வந்தார். இடையில் அவருக்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கை அவர் விசாரித்து வந்தார். குற்றவாளிகள் 9 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 76 விதமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து 12 ஆவணங்கள் குறிக்கப்பட்டன. 11 ஆவணங்களை நீதிமன்றமே தானாக எடுத்துக்கொண்டது. குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்பட 30 பொருட்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்களும், 48 சாட்சியாக இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை. மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டன.
இதையும் படிங்க: தொடரும் மர்மம்.. ஆட்டிசம் பாதிப்பு இளைஞர் உடல் தோண்டியெடுப்பு.. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..!
இத்தனையையும் அலசி ஆராய்ந்த நீதிபதி நந்தினி தேவி இன்றைக்கு 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களை தொடர்பு படுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவர் தாக்கல் செய்த மனுவில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்பு படுத்தி நக்கீரன் யூடியூப், அறன் செய், ஜீவா டுடே, ஜாம்பவான், உள்ளிட்ட 8 யூடியூப் சேனல்கள் அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோக்களை அகற்ற உத்தரவிட வேண்டும். ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: காமுகன் திருநாவுக்கரசுக்கு மட்டும் ஏன் ஐந்து ஆயுள் தண்டனை - அரசு வழக்கறிஞர் சொன்ன பகீர் காரணம்...!