அய்யோ தங்க மனசுய்யா..!! மூன்றரை சவரன் பிரேஸ்லெட்டை ஒப்படைத்த இளநீர் வியாபாரி.!!
புதுச்சேரியில் தவறவிட்ட மூன்றரை சவரன் தங்க பிரேஸ்லெட் அடங்கிய பர்சை இளநீர் வியாபாரி திரும்ப ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் நிகழ்ந்த ஒரு அரிய நேர்மைச் சம்பவம் சமீபத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. திருமணத்திற்காகப் பெண் பார்க்கச் சென்றிருந்த ஒரு நபர், தனது பர்ஸை தவறவிட்டார். அந்த பர்ஸில் 3.5 சவரன் எடையுள்ள தங்க பிரேஸ்லெட் உள்ளிட்டவை இருந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பர்ஸை சாலையில் கண்டெடுத்தவர் இளநீர் வியாபாரியான முருகன்.
தவளக்குப்பம் பகுதியில் இளநீர் விற்று வந்த அவர், தரையில் கிடந்த பர்ஸைப் பார்த்தவுடன் அதை எடுத்து உள்ளே என்ன இருக்கிறது எனப் பார்த்து உள்ளார். பஸ்ஸில் தங்க பிரேஸ்லெட் உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், நேராக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தார். காவல்துறையினர் பர்ஸைப் பெற்றுக்கொண்டு, அதில் இருந்த விவரங்களை ஆராய்ந்து உரிய உரிமையாளரைத் தேடி கண்டறிந்தனர்.
பிரேஸ்லெட்டுடன் பர்ஸை முழுமையாக அவரிடம் ஒப்படைத்தனர். உரிமையாளருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே, இளநீர் வியாபாரி முருகனின் நேர்மையைப் போலீசார் பெரிதும் பாராட்டினர்.காவல் துறையினர் அவருக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவித்து கௌரவித்தனர். இந்தச் செயல் சமூக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிங்க: "சிங்கம் ஒன்று புறப்பட்டதே"... ரஜினி பாடலுடன் அமித்ஷா மாஸ் என்ட்ரி...! தொண்டர்கள் செம்ம குஷி..!
"நேர்மை இன்னும் உயிரோடு இருக்கிறது" என்று பலரும் பேசினர்.முருகனின் இந்தச் செயல், சாதாரண மனிதர்களிடையேயும் உயர்ந்த ஒழுக்கமும் நாணயமும் இருப்பதை நிரூபிக்கிறது. கடினமான வாழ்க்கை நிலையில் இருந்தாலும், பெரிய தொகைக்கு சொந்தமான பொருளை கண்டறிந்தபோது கூட தனது நேர்மையை விட்டுக் கொடுக்காமல், சரியான வழியில் ஒப்படைத்த அவரது செயல் பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: புதுவையில் பாஜக பிரச்சார பயணம் தொடக்கம்... தாமரை மலருக்கு வண்ணம் தீட்டிய அமித்ஷா..!