தமிழகம் முழுவதும் நாளை கருப்புக்கொடி போராட்டம்! தொகுதி மறுவரையறைக்கு எதிராக சிபிஐ(எம்) அதிரடி!
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி போராட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.
பாஜக அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (ஏப்ரல் 16) தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், கருப்புச் சட்டை அணிந்தும் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அழைப்பு விடுத்துள்ளது. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் செயல் எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்ற போர்வையில், கொல்லைப்புற வழியாகத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டு வர மோடி அரசு முயற்சிக்கிறது. இதற்காக நாளை முதல் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, 131-வது சட்டத் திருத்தத்தை முன்மொழிய பாஜக திட்டமிட்டுள்ளது.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குப் பல்வேறு இழப்புகள் ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது: வடமாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையும். நிதிப் பகிர்வு, வரிப் பகிர்வு மற்றும் மாநில உரிமைகள் ஆகியவற்றில் தமிழகம் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். தேச நலன் கருதி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்வதாகச் சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கத்தி கழுத்துக்கு வந்துடுச்சு..! ஓரணியில் திரள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!
தற்போது தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் மே 4-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தப் பணிகள் பாதிக்கப்படும் வகையில், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்காமல் தன்னிச்சையாக அவசரம் அவசரமாகப் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது கண்டிக்கத்தக்கது என அறிக்கை கூறுகிறது.
தமிழ்நாட்டிற்கு விரோதமான இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (ஏப்ரல் 16) பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், கருப்புச் சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தங்களது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் எனப் பெ. சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றாலும், அதனைத் தொகுதி மறுவரையறையோடு இணைத்துக் காலந்தாழ்த்தவும், மாநில உரிமைகளைச் சிதைக்கவும் பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என அந்த அறிக்கை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்புக்கு விஜய் கண்டனம்..!! மத்திய அரசின் பாரபட்ச நடவடிக்கை..! குற்றச்சாட்டு..!!