பஞ்சாப் ஆம் ஆத்மியில் பிளவு: 7 எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 7 மாநிலங்களவை எம்.பி-க்களின் முடிவை, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.
பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் (AAP) ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் பிளவை அங்கீகரிக்கும் வகையில், அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்த 7 மாநிலங்களவை எம்.பி-க்களின் முடிவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். இதன் மூலம், மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் வெகுவாகக் குறைந்துள்ளது.
சமீபத்தில் ராகவ் சதா, ஹர்பஜன் சிங், சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து ஒட்டுமொத்தமாகப் பாஜகவில் இணைந்தனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி (Anti-Defection Law), ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் பிரிந்து சென்றால் அவர்களின் பதவி பறிபோகாது. ஆம் ஆத்மிக்கு மாநிலங்களவையில் இருந்த 10 உறுப்பினர்களில் 7 பேர் பிரிந்து சென்றதால், அவர்களின் இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமாகச் செல்லும் என மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று அறிவித்தார்.
இந்தத் திடீர் அரசியல் மாற்றத்தால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. அதேசமயம், கட்சியின் முக்கிய முகங்களாக இருந்தவர்கள் வெளியேறியது ஆம் ஆத்மிக்குத் தேசிய அளவில் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. "ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கட்சியின் முதுகில் குத்திவிட்டனர்" எனப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சாடியுள்ள நிலையில், ஜலந்தரில் உள்ள ஹர்பஜன் சிங்கின் வீட்டின் முன் அக்கட்சித் தொண்டர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் இந்த முடிவைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இருக்கை ஒதுக்கீடு மற்றும் கட்சி சார்ந்த தரவரிசைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இதையும் படிங்க: ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்..!! போலீஸ் பாதுகாப்பை நீக்கி பஞ்சாப் அரசு அதிரடி..!!
இதையும் படிங்க: ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!