ரமலான் நோன்பு நாளை தொடக்கம்... தமிழகத்தில் பிறை தென்பட்டதாக தலைமை ஹாஜி அறிவிப்பு!
புனித ரமலான் மாதம் நாளை (பிப்ரவரி 19, 2026) முதல் தொடங்குவதாகத் தமிழக அரசின் தலைமை ஹாஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் நோன்பு நாளை (பிப்ரவரி 19) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் ரமலான் மாதத்திற்கான பிறை தென்பட்டதை அடுத்து, நாளை முதல் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பு கடைபிடிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று இரவு முதல் ரமலான் மாதத்திற்கான சிறப்புத் தொழுகையான 'தராவிஹ்' தொடங்குகிறது.
இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமான ரமலான் மாதத்தின் ஒரு புனித இரவில்தான், இறைவேதமாம் திருக்குர்ஆன் வசனங்கள் முதன்முதலில் அருளப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பசி மற்றும் பட்டினியின் வலியைச் செல்வம் படைத்தவர்களும் உணர வேண்டும், ஏழை எளியவர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகவே இந்த நோன்பு இஸ்லாம் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோன்பு இருப்பவர்கள் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்னே 'சஹர்' எனப்படும் உணவை உட்கொண்டு நோன்பைத் தொடங்குவர். பின்னர் மாலை சூரிய மறைவிற்குப் பின் (மஹ்ரிப் தொழுகை நேரம்) நோன்பு கஞ்சி அல்லது உணவருந்தி நோன்பை நிறைவு செய்வர் (இஃப்தார்). ரமலான் மாதம் முழுவதும் தினமும் ஐந்து வேளைத் தொழுகையுடன் சேர்த்து, இரவு நேரங்களில் 'தராவிஹ்' எனப்படும் சிறப்புத் தொழுகை பள்ளிவாசல்களில் நடைபெறும். அதிகாலை முதல் மாலை வரை நீர் கூட அருந்தாமல், தீய எண்ணங்கள் மற்றும் செயல்களைத் தவிர்த்து இறை சிந்தனையுடன் இஸ்லாமியர்கள் இந்த 30 நாட்களும் நோன்பிருப்பார்கள்.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!
இந்த 30 நாட்கள் தவத்தின் முடிவில், ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகை (ஈத்-உல்-பித்ர்) வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். ரமலான் மாதம் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆடிட்டர் வீட்டில் மாயமான 63 சவரன் நகைகள்... சிசிடிவி காட்சியை பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... கொத்தாக தூக்கிய போலீஸ்...!