"ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!
பாமக தலைவர் பதவி தொடர்பாக தொடர்ந்த வழக்கை ராமதாஸ் திரும்பப் பெற்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தன்னை கட்சியின் தலைவராக அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதத்தை ரத்து செய்யவும், பாமக பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கியதாகவும், அவருக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கூறப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனால் பாமகவின் பெயர், சின்னம் மற்றும் தலைமைப் பொறுப்பு தொடர்பான சட்டப் போராட்டம் தீவிரமடைந்தது.
உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை எதிர்த்து அன்புமணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தன்னை வழக்கில் இணைக்கக் கோரி மனு அளித்தார். இந்த சூழலில், உரிமையியல் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி வடிவேல் ராவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். நீதிபதி தமிழ்செல்வி இந்த மனுவை விசாரித்து, உரிமையியல் நீதிமன்ற வழக்குக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: "25 வருஷ உழைப்பு.. பணி நீக்கம் செய்வதா?" மின்வாரிய ஊழியர்களுக்காக அன்புமணி இராமதாஸ் போர்க்கொடி!
ராமதாஸ் தரப்பினர் இந்த தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போது நீதிபதி, “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. என்ன செய்யப் போகிறீர்கள்? தந்தை-மகன் பிரச்சினை நாளை சரியாகலாம். ஆனால் கட்சியை வைத்துத்தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்” எனக் கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்து பெரும் கவனத்தை ஈர்த்தது. வழக்கு மேலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக முன்பும் பல முக்கிய தீர்ப்புகள் வந்துள்ளன. தேர்தல் ஆணையம் அன்புமணி தலைமையிலான பாமகவே உண்மையானது என்றும், மாம்பழ சின்னம் அதற்கே உரியது என்றும் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த சில மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன. பாமகவின் உள் மோதல் நீண்டகாலமாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் அன்புமணி தனது தந்தை ராமதாசை சந்தித்தார். இருவரும் கண்கலங்கி ஆரத்தழுவிய காட்சிகள் வெளியாகின.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக தன்னை அறிவிக்க கோரி தொடர்ந்த வழக்கை ராமதாஸ் திரும்பப் பெற்றுள்ளார். தங்களுக்குள்ளான பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொண்டதாகவும் தனது வழக்கை திரும்ப பெறுவதாகவும் ராமதாஸ் மனு தாக்கல் செய்தார். வழக்கை திரும்ப பெறுவதாக ராமதாஸ் கூறியதை அடுத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இதையும் படிங்க: "கரூர் போல"..! வன்னியர் தியாகிகள் குடும்பத்தினருக்கும் அரசு வேலை..! அன்புமணி வலியுறுத்தல்..!