×
 

எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கர் அப்பகுதிக்கு வருகை தந்தார்.

திருச்சி மாவட்டம் துறையூரில், சமூக வலைதள ‘ரீல்ஸ்’ விளம்பரத்திற்காக அரசு அதிகாரியைப் பொதுவெளியில் மக்கள் பிரதிநிதி ஒருவர் கடிந்து கொண்ட சம்பவம், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இன்னும் ஐந்து வருடம் இருக்கு... அதுக்குள்ள இப்படியா?" எனப் புலம்பத் தொடங்கியுள்ளனர் உள்ளூர் அரசு அதிகாரிகள்.

துறையூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காகப் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகள் வசதிக்காகச் சொரத்தூர் சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பழைய இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தற்காலிக நிலையத்திற்குப் பயணிகளை ஏற்றிச் செல்ல நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இப்பணிகளை ஆய்வு செய்வதற்காகத் துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கர் அப்பகுதிக்கு வருகை தந்தார். மக்கள் குறைகளைக் கேட்க வந்த இடத்தில், சட்டமன்ற உறுப்பினருடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தங்களின் செல்போன் கேமராக்களைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு அவரைச் சுற்றிச் சுற்றி ‘வீடியோ’ எடுக்கத் தொடங்கினர்.

இதையும் படிங்க: ஷாக்கிங் வீடியோ...!! - ரீல்ஸ் மோகத்தில் தவெகவினர் செய்த காரியம்... அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து அட்ராசிட்டி...

சுற்றிலும் கேமராக்கள் சுழல்வதைப் பார்த்ததும், அங்கு பணியில் இருந்த அரசுப் போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் உதயகுமார் என்பவரை நோக்கிப்  துணை சபாநாயகர் ரவிசங்கர் பாய்ந்தார். பொதுமக்கள் முன்னிலையிலேயே, "நீங்களெல்லாம் ஒரு அதிகாரியா? அரை மணி நேரமாகப் பேருந்து இல்லை என்கிறார்கள். உங்கள் வீட்டுப் பெண்கள் என்றால் இப்படி நடந்து போவார்களா? நேற்று ஒருவர் மயங்கி விழுந்துவிட்டார்... என்ன வேலை பார்க்கிறீர்கள்?" என ஏகத்துக்கும் சத்தம் போட்டு ‘அர்ச்சனை’ செய்தார்.

அதிகாரியை அவர் திட்டித் தீர்த்த அடுத்த சில நிமிடங்களில், அந்த வீடியோ கட்சி நிர்வாகிகளின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும், சமூக வலைதள ‘ரீல்ஸ்’களிலும் "தலைவரின் அதிரடி ஆக்‌ஷன்" என்ற பின்னணி இசையோடு வலம் வரத் தொடங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள், "ஆய்வு செய்ய வந்தாரா இல்லை சோசியல் மீடியாவுக்கு கன்டென்ட்  எடுக்க வந்தாரா?" என்று முணுமுணுக்கத் தொடங்கினர்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை தரப்பில் விசாரித்தபோது, "பேருந்து நிலையப் பணிகள் நடப்பதால் சில நடைமுறைச் சிரமங்கள் இருப்பது உண்மைதான். அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். குறைகள் இருந்தால் தனி அறையிலோ அல்லது அரசு ரீதியாகவோ சுட்டிக்காட்டிச் சரி செய்யச் சொல்வதுதான் மக்கள் பிரதிநிதியின் கடமை. அதை விடுத்து, தன் கட்சித் தொண்டர்கள் மத்தியில் ‘மாஸ்’ காட்டுவதற்காக, பொதுமக்கள் முன்னிலையில் ஓர் அரசு அதிகாரியைத் தரக்குறைவாக நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?" என வேதனை தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "ஆட்சிப் பொறுப்பேற்று ஆரம்பத்திலேயே விளம்பரத்திற்காக அரசு அதிகாரிகளை இப்படிப் பொதுவெளியில் வறுத்தெடுத்தால், இன்னும் வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் அரசுத் துறை அதிகாரிகள் என்னென்ன பாடுபடப் போகிறார்களோ தெரியவில்லை! ‘ரீல்ஸ்’ மோகம் மக்கள் பிரதிநிதிகளையும் தொற்றிக் கொண்டதுதான் காலக்கொடுமை" எனத் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான "குண்டாஸ் ரத்து"..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..! புதிய திருப்பம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share