"நான் என்ன தவறு செய்தேன்? இப்போதே அரசியலை விட்டு விலகத் தயார்!" ஓ. பன்னீர்செல்வம் உருக்கம்!
அதிமுகவில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது சொந்தத் தொகுதியான போடியில் மிகவும் உருக்கமாகப் பேசினார்.
அதிமுக-வின் சட்ட விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் கட்சிக்குள்ளான அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தனது சொந்தத் தொகுதியான போடிநாயக்கனூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கடந்த 46 கால அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த அவர், தன் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து மிகவும் உருக்கமானக் கேள்விகளை எழுப்பினார்.
"கடந்த 1980-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 46 ஆண்டுகளாக இந்தக் கழகத்திற்காக அடிமட்டத் தொண்டனாக இருந்து உழைத்தவன் நான். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு விசுவாசமாக இருந்து, அவர் இட்டப் பணிகளைச் செவ்வனே செய்துள்ளேன். அமைச்சராகவும், முதலமைச்சராகவும் நான் ஆற்றியப் பணிகளில் எவரும் குறை சொல்ல முடியாது" எனத் தனது அரசியல் வரலாற்றைப் பட்டியலிட்டார்.
தன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், "கழகத்தின் வளர்ச்சிக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? யாருடைய உரிமையைத் தட்டிப் பறித்தேன்? நான் செய்த தவறு என்னவென்று மட்டும் சொல்லுங்கள்; அப்படி ஏதேனும் தவறு இருப்பின் இப்போதே அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். காரணமே இல்லாமல் ஓரம் கட்டுவது நியாயமா?" என ஆவேசமும் உருக்கமும் கலந்துக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "100 சதவீதம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்!" - முன்னாள் அமைச்சர் வீரமணி உறுதி!
அதிமுக-வின் சட்ட விதிகள் திருத்தப்பட்டது குறித்துப் பேசிய அவர், "தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எம்ஜிஆர் உருவாக்கிய விதியை மாற்ற இவர்களுக்கு அதிகாரமே இல்லை. அம்மாவால் உருவாக்கப்பட்ட இயக்கத்திற்குப் பங்கம் விளைவிப்பவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சாடினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்த ஓபிஎஸ், வரும் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்துத் தனது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினரின் விருப்பப்படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இறுதியில் தர்மமே வெல்லும்" என்று குறிப்பிட்ட அவர், தொண்டர்களின் உரிமையை மீட்கும் வரை தனதுப் போராட்டம் ஓயாது என உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வட மாவட்டங்களுக்கு டார்கெட்..!! அதிரடியாக களத்தில் இறங்கிய இபிஎஸ்..!! சூடுபிடிக்கும் பிரச்சாரம் ஸ்டார்ட்..!!