×
 

டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பான வழக்கைக் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "நுகர்வோர்கள் கூடுதல் தொகையைக் கொடுப்பதால்தான் கடைப் பணியாளர்களும் கேட்கின்றனர்" என்ற சுவாரஸ்யமான கருத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இது தொடர்பான புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் தொகை வசூலித்தால், அதுகுறித்துச் சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையத்தில் நுகர்வோர் உடனடியாகப் புகார் அளிக்கலாம். அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது காவல் துறை தாமதிக்காமல் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

விசாரணையின் போது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், "விற்கப்படும் மதுபானங்களுக்குக் கட்டாயம் ரசீது (Bill) வழங்க வேண்டும் என அனைத்துக் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதி, "மாநில அரசுக்குப் பெருமளவில் வருவாயை ஈட்டித் தரும் மதுபானக் கடைகளில் ரசீது வழங்குவதில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு என்ன சிக்கல் உள்ளது?" என கேள்வி எழுப்பினார்.

நுகர்வோர் கூட்டம் அதிகமாகக் காணப்படும் டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காகக் காவலர்களைப் பணியமர்த்துவது குறித்துத் தமிழ்நாடு உள்துறை பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்துப் பேசிய நீதிபதி, "நுகர்வோர்கள் கூடுதல் தொகையை எதிர்ப்பின்றிப் பணியாளர்களுக்குக் கொடுப்பதால்தான், அவர்களும் துணிச்சலாகக் கேட்கின்றனர்" என்ற கருத்தையும் விசாரணையின் போது வெளிப்படுத்தினார்.

இறுதியாக, இந்த வழக்கில் மனுதாரர் தேவராஜன் அளித்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விரிவாக விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டம் ஆபத்தானது! அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share