நெல் கொள்முதலில் சிக்கல்? தேர்தல் ஆணையத்திற்கு அரிசி வியாபாரிகள் கோரிக்கை!
தேர்தல் காலத்தில் நெல் கொள்முதல் செய்ய சிறு வியாபாரிகள் ரொக்கப் பணம் கொண்டு செல்ல அனுமதி கோரி காரைக்குடியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் துளசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 25 கிலோ மற்றும் அதற்கு குறைவான எடையுள்ள அரிசி பைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கிறது. எனவே, மக்கள் நலன் கருதி இந்த 5 சதவீத வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதேபோல், எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பப்படும் தவிடு மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரியையும் நீக்க வேண்டும், என்று வலியுறுத்தினார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நெல் கொள்முதல் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அரிசி மற்றும் நெல் வியாபாரிகளுக்கு ஒரே விதிமுறைதான் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம், நெல் கொள்முதல் செய்யும் சிறு வியாபாரிகள் தடையின்றி ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வது பாதிக்கப்படாது, என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்ன மக்களே ரெடியா? காரைக்குடியில் சீமான் பேட்டி? வெளியான முக்கிய தகவல்..!!
அரிசி ஆலைகளின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் வரிச் சுமைகளால் தொழில் நலிவடைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய சம்மேளனத்தினர், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விரைவில் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் பறக்கும் படையின் அதிரடி சோதனை..!! உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட வைரக் கற்கள் பறிமுதல்..!!