×
 

#BREAKING மக்கள் பாதுகாப்பிற்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...!

அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட்ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரே பொறுப்பு

அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட்ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரே பொறுப்பு என தமிழக அரசு வரைவு வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளினுடைய ரோட் ஷோக்களுக்கு அனுமதியை அளிப்பதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் இடம் பெற்றிருக்கக்கூடிய தகவல்கள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றன. அதில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடுவதற்கும் முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5000 பேருக்கு மேல் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோட் ஷோக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் மற்றும் கலாச்சாரம் மற்றும் மத நிகழ்வுகளுக்கு இந்த விதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தளங்களில் நடைபெறும் மதரீதியான கூட்டங்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: ரோடு ஷோ கட்டுப்பாடுகள்: தமிழக அரசுக்கு எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த ஐகோர்ட் ... தவெக, அதிமுகவுக்கு சப்போர்ட்...!

நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அதாவது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது தேர்தல் ஆணை வெளியிடும் விதிகள் மட்டுமே அமலில் இருக்கும் எனவும், கூட்ட கட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்க செய்யும் இந்த விதிகளை அமல்படுத்துவது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5000த்திற்கும் குறைவாக மக்கள் திரளும் கூட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது. ஆனால் தற்போதைய நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொது கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோட்ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவை நடைபெற உள்ள இடங்களை காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோட் ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் முன் என்ன தேதி? நேரம் ? எதற்காக ? எவ்வளவு மக்கள் பங்கேற்பார்கள் ?எத்தனை வாகனங்கள் வரும்? பங்கேற்கும் முக்கிய தலைவர்களின் விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் ரோட்ஷோக்களை பொறுத்தவரை

பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தை துவங்கும் இடம் மற்றும் முடிக்கும் இடங்களையும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைமை விருந்தினர்கள் வருகை தரும் நேரம் மற்றும் புறப்படும் நேரத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இது மாதிரியான நிகழ்வுகளில் மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்க முடியும் என்பதை பொதுப்பணித்துறை பொறியாளர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுப்பணித்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டம் மற்றும் ரோட் ஷோக்கள் நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியை பெற வேண்டும் எனவும் நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

50,000 பேருக்கு மேல் திரள்வார்கள் என எதிர்பார்க்கக்கூடிய கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் எனவும், திடீரென ஏற்பாடு செய்யப்படக்கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களை பொறுத்தவரை மாவட்ட ஆட்சியரும், சென்னைக்கு மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களில் முதல் உதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு என்றும் நிகழ்ச்சியின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இளப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை முழுமையாக தூய்மை செய்து ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் நீண்ட நேரத்திற்கு நிற்க வைக்காமல் அவர்கள் பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டகள் தான் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சி துவங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்த விரைவு வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: ரோடு ஷோ தேவையே இல்ல... தடை பண்ணுங்க... திருமாவளவன் காட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share