கூட்டணி ஆட்சி வேண்டாம் என்பதை ராகுல் காந்தியே ஏற்றுக்கொள்வார்..!! ஆர்.எஸ் பாரதி தக்க பதிலடி..!!
கூட்டணி ஆட்சி வேண்டாம் என்பதை ராகுல் காந்தியே ஏற்றுக்கொள்வார் என்று ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கவும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய அரசியல் சக்திகளும் தனித்துப் போட்டியிடுவதால், நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது. இதனால் தேர்தல் களம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் காங்கிரஸ் கட்சியுடன் சமீப காலமாக சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஆட்சி அமைந்தால் அதிகாரப் பங்கீடு அல்லது கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இது குறித்து பகிரங்கமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் கூட்டணியில் சிறு பதற்றம் நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தை சீர்குலைக்க.. சாக்குப்போக்கை கண்டுபிடிக்கும் ராகுல்..!! தர்மேந்திர பிரதான் விளாசல்..!!
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டு சூழலுக்கு பொருந்தாது என்று தெளிவாகத் தெரிவித்திருந்தார். இது காங்கிரஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.
இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: “இனி யாரும் கூட்டணி ஆட்சி குறித்து பேச மாட்டார்கள். 5,000 ரூபாய் கொடுத்த பிறகு மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.செல்வப்பெருந்தகை ஆகியோர் மட்டுமே. இவர்கள் மூவரில் யாராவது ஒருவர் கேட்டால் மட்டுமே பதில் அளிப்போம்.
கூட்டணி ஆட்சி வேண்டாம் என்பதை ராகுல் காந்தியே ஏற்றுக்கொள்வார். எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினும் இதை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். எனவே, இனி ஆட்சியில் பங்கு கோரும் பேச்சுகள் இருக்காது. இதனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எந்த சிக்கலும் ஏற்படாது” என்று தெரிவித்தார்.
இந்த விளக்கத்தின் மூலம் திமுக தரப்பு, கூட்டணி உறுதியாக இருப்பதை வலியுறுத்திய அதேவேளை, ஆட்சி அதிகாரப் பங்கீடு கோரிக்கையை மறுத்துள்ளது. இது திமுக-காங்கிரஸ் கூட்டணியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் ஆகியவை தீவிரமடையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: சீன ஊடுருவல்: ராகுலை கண்டு பிரதமர் பயப்படுவது ஏன்? கரூா் எம்.பி. ஜோதிமணி அதிரடி கேள்வி!