ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் வேலுமணி! இப்ப கொள்கையில் இடிக்கலையா இபிஎஸ் சார்? சர்ச்சைக்கு மேல் சர்ச்சை..!
முருக பக்தர்கள் மாநாட்டின் சர்ச்சை ஓய்வதற்குள் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி ஆர் எஸ் எஸ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டுள்ள சம்பவம் பேசு பொருளாக மாறி உள்ளது.
2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்தக் கூட்டணி, பாஜகவின் மத்திய அரசின் கொள்கைகளுக்கு அதிமுக மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவும், தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பதாகவும் எதிர்க்கட்சிகள், விமர்சித்தன. NEET மற்றும் GST போன்ற மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், இவற்றுக்கு எதிராக அதிமுக தலைமை உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
கீழடி அறிக்கை வெளியீடு தொடர்பான சர்ச்சையில் அதிமுகவின் கள்ள மவுனம் பாஜகவின் தமிழர் வரலாற்றை மறைக்கும் முயற்சிக்கு உடந்தையாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. தற்போது, மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் குறித்து விமர்சனங்கள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மேடையில் இருந்தது.
இதையும் படிங்க: எல்லாம் நாசமா போச்சு.. அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்.. விளாசிய இபிஎஸ்..!
பாஜகவின் சித்தாந்தங்களுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாகவும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை விட்டு விலகுவதாகவும் விமர்சிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பாஜகவின் கொள்கைகளை அதிமுக மறைமுகமாக ஆதரித்து வருவதாக கடன் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டு விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அது தொடர்பான விவாதங்கள் நிறைவு பெறாத நிலையில், கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பங்கேற்றுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் எஸ் பி வேலுமணி ஆர் எஸ் எஸ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுள்ளது பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய் சுந்தரத்தை, 2024 ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்றதற்காக, கட்சியின் கொள்கைகள் மற்றும் விதிகளை மீறியதாகக் கூறி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கினார். இந்த நிகழ்வு, அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த பின்னர் நடந்ததால், கட்சியின் தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்டது. தளவாய் சுந்தரம், இந்த பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார், இதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, கட்சி விசாரணை நடத்தப்படும் வரை அவர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர், தளவாய் சுந்தரம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாகக் கூறி, இபிஎஸ் அவரை மீண்டும் கட்சியின் அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் மீண்டும் நியமித்தார். தற்போது மீண்டும் பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டுள்ளார். தற்போது கட்சியின் கொள்கைகளுக்கு மீறிய செயலாக இது தெரியவில்லையா என்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முருகனுக்கு அரோகரா! அன்பா? அரசியலா.. இபிஎஸ்க்கு வேல் பரிசளித்த அதிமுகவினர்!