×
 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பர்?! யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்! இரவோடு இரவாக பொறுப்பேற்பு!

தமிழகத்தின் டிஜிபியாக பொறுப்பேற்றிருக்கும் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை கமிஷனராக இருந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மாற்றப்பட்டார்.

தமிழக போலீஸ் துறையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையராக இருந்தபோது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சந்தீப் ராய் ரத்தோர், தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றுள்ளார்.

1992 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ரத்தோர், கடந்த சில மாதங்களாக காவலர் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக பணியாற்றி வந்தார். தமிழக அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்பிய 9 அதிகாரிகள் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் அவரை நிரந்தர டிஜிபியாக தேர்வு செய்தது. முன்பு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டார்.

இந்த நியமனத்துக்கு பின்னணியில் பல சர்ச்சைகள் இருந்தன. முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியில் இருக்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது. 

இதையும் படிங்க: வாய ஒடச்சிடுவேன்..! விஜயை விமர்சித்த நபர்..!! துரத்திச் சென்று லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்..!!

இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. போலீஸ் நிர்வாகத்தை தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்டுப்பாட்டில் வைக்கவே நிரந்தர டிஜிபி நியமனத்தை தாமதப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்றது. இறுதியில் பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் மூன்று வாரங்களுக்குள் நிரந்தர டிஜிபியை நியமிக்க உத்தரவிடப்பட்டது.

சந்தீப் ராய் ரத்தோர் 2024ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக இருந்தபோது பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல மூன்று முறை உளவுத்துறை எச்சரிக்கை வந்ததாகக் கூறப்படுவது உண்மையல்ல. எந்த உளவுத் தகவலும் எங்களுக்கு வரவில்லை” என்று தெரிவித்திருந்தார். இந்தக் கொலை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்குப் பிறகு சந்தீப் ராய் ரத்தோர் உள்துறை முதன்மை செயலாளர் அமுதாவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

ரத்தோர் தமிழகத்தில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கோவையில் துணை கமிஷனராக பணியாற்றியபோது 1998 தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க முக்கியப் பங்காற்றினார். சென்னை மாநகர துணை ஆணையராக இருந்தபோது எல்இடி சிக்னல் விளக்குகளை அறிமுகப்படுத்தினார். சிபிசிஐடி எஸ்பியாக முத்திரைத்தாள் மோசடி வழக்கில் விசாரணையில் ஈடுபட்டார். தூத்துக்குடி எஸ்பி, மத்திய தொழிலக பாதுகாப்பு படை டிஐஜி, கடலோர பாதுகாப்பு ஐஜி உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரத்தோரின் நியமனம் தமிழக போலீஸ் துறையில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share