கொடுமை..! அரசு மருத்துவமனைகளில் பறிபோகும் அப்பாவி உயிர்கள்... கொந்தளித்த சீமான்..!!
அரசு மருத்துவமனைகளில் அப்பாவி உயிர்கள் பறிப்போவதாக சீமான் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
அப்பாவி பெண் உயிரிழக்க காரணமாகியுள்ள அரசு மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாதது என்றும் ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சொன்னா கேளுங்க வேணாம்"..! கடலூரில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்..! மீன்பிடி தொழிலுக்கே பேராபத்து..! எச்சரித்த சீமான்..!
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணம் என்று கூறிய சீமான், அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தினார். மேலும், உயிரிழந்த தமிழ்ச் செல்வி குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: "எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!