மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!
மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் மாணவிகள், தங்கள் பாதையில் அச்சுறுத்தலாக இயங்கி வந்த தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி அறப்போராட்டம் நடத்தியபோது, காவல்துறையினர் அவர்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தவெக அரசின் கொடுங்கோன்மை என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிச் செல்லும் சிறுமிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த மதுக்கடையை மூடக் கோரிய போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் கைகளை கிழித்து, அவர்களை படுகாயப்படுத்திய காவல்துறையின் செயல் மனித உரிமைகளுக்கு எதிரானது என சீமான் சாடினார். “ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கூடங்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளை அனைத்தும் மூடிவிட்டதாகக் கூறும் தவெக அரசின் பட்டியலில் கோடாலி கிராமத்து மதுக்கடை ஏன் இடம்பெறவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற பல மதுக்கடைகள் பள்ளிகள், கல்லூரிகள் அருகே இயங்கி வருவதாகவும், அவை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பள்ளி செல்லும் மாணவிகள் போதைப்பொருள் விற்பனையாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது மனிதப் பேரவலம் என்று விவரித்த சீமான், “கல்வியை விட்டுவிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவிகளை வீதிக்கு வரச் செய்தது யார்?” என்று தவெக அரசை நேரடியாக கேள்வி கேட்டார். மாணவிகள் போராட்டம் நடத்திய பின்னரும் மதுக்கடையை மூடாமல், காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தியது கொடுங்கோன்மை என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகம் கேள்விக்குறி..! துரோகம் பண்ணிட்டீங்க... தவெகவை பந்தாடிய சீமான்..!
“பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளை காயப்படுத்த தவெக காவல்துறைக்கு எப்படி மனம் வந்தது? இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா? பெண்கள் பாதுகாப்புக்கு சிங்கப்பெண்கள் காவல் படை உருவாக்கிய அரசு, இப்போது மாணவிகளை காவல்துறையிடமிருந்து பாதுகாக்க என்ன படையை உருவாக்கப் போகிறது?” என்று தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினார்.நாம் தமிழர் கட்சியின் நீண்டகால முதன்மை கோரிக்கையான முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய சீமான், தவெக அரசு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பதாக கூறும் அதேவேளையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவது போதைப்பொருள் அல்லவா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: அது அரசா... தரிசா..? நாசமாகும் நெல்மணிகள்..! தவெகவை வெளுத்து வாங்கிய சீமான்..!