×
 

151 இடங்கள் பறிபோனதே உண்மை..! வெற்றி கொண்டாட்டம் வெட்கக்கேடு... தவெகவை பந்தாடிய சீமான்..!!

151 மருத்துவ இடங்கள் பறிபோனதே உண்மை என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு உரிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தவெக அரசு வலுவான வாதங்களை முன்வைக்கத் தவறியதாகவும், அதனால் இடங்களை பறிகொடுத்ததாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக முன்நின்று வாதங்களை வைக்கக்கூட தவறியது மாநில உரிமையைத் தாரைவார்க்கும் பெருங்கொடுமை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின் இந்திய ஒன்றிய அரசால் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பால் நீக்கப்பட்டது. அதனை எதிர்த்து 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கை என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

ஆனால் நடப்பு கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில் நிரப்பப்படாத 151 இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற கடந்த மே 29 அன்று உச்சநீதிமன்றம் இட்ட உத்தரவால் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெக அரசின் அலட்சியத்தால் 151 மருத்துவ இடங்கள் பறிபோவதை கடுமையாகக் கண்டித்து ஜூன் 3 அன்று அறிக்கை வெளியிட்டதோடு, நீட் மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில் மத்திய அரசு மாநில அரசுக்குச் சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிக்கும் சூழ்ச்சியை தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அப்போதே வலியுறுத்தியிருந்ததாக சீமான் நினைவூட்டியுள்ளார். ஆனால் அதன் பிறகும் திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கைத் திறம்பட நடத்தாததால் தற்போது உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மீண்டும் உறுதி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: நாதக நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்... ஆட்சி மாறியுமா?.. சீமான் கொந்தளிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share