பணக்காரர்களின் மதில் சுவரை இடிக்க திமுகவிற்கு துணிவிருக்கா? விளாசிய சீமான்..!
சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்து இருந்தார். இந்த நிலையில் மக்கள் குடியிருப்புகளை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார். அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வகுடி மக்களின் மீது காவல்துறை மூலம் கடுமையான அடக்குமுறைகளை ஏவி திமுக அரசு கைது செய்திருப்பது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயல் என்றும் அடையாறு ஆற்றினை 110 அடியிலிருந்து 360 அடியாக அகலப்படுத்தும் பொருட்டு ஆற்றங்கரை ஒரு புறத்தில் அமைந்துள்ள ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்ற முயலும் திமுக அரசு, கரையின் மறுபுறத்தில் உள்ள பெருமுதலாளிகளுக்கு சொந்தமான இடங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்றும் அவையெல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா எனவும் ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரும் மதில் சுவர்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற திமுக அரசிற்குத் துணிவிருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: ஐயா எங்க வீடெல்லாம் போய்டுச்சு..! சீமானிடம் அழுது புலம்பிய அனகாபுத்தூர் மக்கள்..!
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கும் செலுத்தி வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்ற செயல் என தெரிவித்த சீமான், அம்மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள் இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா என கேள்வி எழுப்பினார்.
ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், நிலவிற்பன்னர்கள் ஆகியோருக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை திமுக அரசு தாரைவார்க்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க திறனற்ற திமுக அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சம் என்று கூறினார். ஆகவே, தமிழ்நாடு அரசு சென்னை அனகாபுத்தூர் பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கோடையில் மிரட்டும் கனமழை... தென்பண்ணையில் வெள்ளப்பெருக்கு! மக்களே உஷார்!