×
 

என்னதான் நடக்குது..?? நீக்கிய வாழ்த்து செய்தி..!! மீண்டும் அப்படியே போஸ்ட் செய்த செங்கோட்டையன்..!!

தவெகவின் 5 கொள்கை தலைவர்கள் மற்றும் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படத்துடன் கார்த்திகை தீப திருநாளுக்கு பதிவிட்ட வாழ்த்து செய்தியை செங்கோட்டையன் நீக்கிய நிலையில் மீண்டும் பதிவிடப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் பகிர்ந்த வாழ்த்து செய்தியை நீக்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவில், தவெகவின் ஐந்து கொள்கை தலைவர்களின் படங்களுடன், திராவிட இயக்கத் தலைவர்களான அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

கார்த்திகை தீபம், தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் நாளில், செங்கோட்டையன் தனது சமூக வலைதள கணக்கில் ஒரு போஸ்டரை பகிர்ந்தார். அதில் தவெக தலைவர் நடிகர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. அதோடு, அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக நிறுவனர் அண்ணா ஆகியோரின் புகைப்படங்களும் சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வாழ்த்து பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்தது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயார் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

செங்கோட்டையன், கடந்த மாதம் 27-ம் தேதி நடிகர் விஜயை சந்தித்து தவெகவில் இணைந்தார். அவர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த பின்னணியில், அவர் பகிர்ந்த வாழ்த்து போஸ்டர், அதிமுக தொண்டர்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. சிலர் இதை "விசுவாசத்தின் அடையாளம்" எனப் பாராட்டினர், மற்றவர்கள் "அதிமுகவை விட்டு விலகிய பிறகு இது தேவையா?" என விமர்சித்தனர். அதிமுக தொண்டர்கள் சிலர், "வெட்கமாக இல்லையா செங்கோட்டையன்?" என கேள்வி எழுப்பினர்.

இருப்பினும், இந்த பதிவை செங்கோட்டையன் அடுத்த நாள் நீக்கினார். இதற்கான காரணம் குறித்து அவர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அரசியல் விமர்சகர்கள், இது தவெகவின் உள் அழுத்தம் அல்லது அதிமுகவின் விமர்சனங்களால் ஏற்பட்டதாகக் கருதுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற ஜெயலலிதாவின் புகைப்படத்தை தவெகவின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்துடன் வெளியிட்டதால் தலைமை கண்டித்ததாகவும், அதனால்தான் செங்கோட்டையில் படத்தை நீக்கிவிட்டதாக சிலர் சொல்கின்றனர்.

மற்றொருபுறம் புஸ்ஸி ஆனந்தின் புகைப்படம் சிறிதாக இருந்ததாலும், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறாததால் செங்கோட்டையன் படத்தை நீக்கி விட்டதாக பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. ஆனால் உண்மை இதுதான் என்று யாருக்கும் தெரியவில்லை.  

இதனிடையே இந்த வாழ்த்து பதிவு கட்சியின் சமூக வலைதள அட்மினால் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் அதிமுகவினர் எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க விரும்பாத தவெக தலைமை இதைத் தடுத்திருக்கலாம் என்று ஊகங்கள் எழுந்தன.

ஆனால், இதற்கு சில மணி நேரங்களே ஆனதும், செங்கோட்டையன் கடுப்புடன் அதே போஸ்டரை மீண்டும் பதிவிட்டார். இந்த நடவடிக்கை அவரது உறுதியை வெளிப்படுத்தியதாக தவெக ஆதரவாளர்கள் பாராட்டினர். “தவெகவில் இணைந்தவர் செங்கோட்டையன், தனது பழைய கட்சி தலைவர்களை மறக்கவில்லை. இது அரசியல் உணர்வின் உச்சம்” என்று ஒரு ஆதரவாளர் கருத்து தெரிவித்தார்.

இச்சம்பவம் தவெகவின் வளர்ச்சியையும், அதிமுகவுடனான மோதலையும் சுட்டிக்காட்டுகிறது. செங்கோட்டையன் போன்ற பழமைவாத அரசியல்வாதிகள் கட்சியில் இணைவது, விஜய்யின் புதிய அரசியல் பயணத்துக்கு பலம் சேர்க்கிறது. இருப்பினும், இது அதிமுகவின் உள் மோதல்களை மீண்டும் எழுப்பியுள்ளது. கார்த்திகை தீப ஒளியில் அரசியல் இருள் நீங்குமா என்பது காலம் தீர்மானிக்கும்.

இதையும் படிங்க: தவெகவுடன் இணைவு..!! செங்கோட்டையனின் அடுத்தடுத்த மூவ்..!! அரசியல் அரங்கில் புதிய திருப்பம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share