உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டத்துறை கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில், கட்சியின் இளைஞரணி செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்துச் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து திமுக வழக்கறிஞர் அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 175 பேருடன் வந்த விமானம்... தரையிறங்கும் முன் மீண்டும் வானில் பறந்ததால் அதிர்ச்சி!
மேலும், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தவெக அரசின் அலட்சியப் போக்கு, திமுக தலைவர் மற்றும் தலைவர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி 6 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது போடப்படும் பொய் வழக்குகளைத் தொகுதி வாரியாக சட்ட ரீதியாக எதிர்கொண்டு முறியடிக்க வழக்கறிஞர் அணி தீவிரமாகச் செயல்படும் எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: திருவொற்றியூரில் பயங்கரம்: சக மாணவர்கள் தாக்கியதில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு!