“எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி
மின்வெட்டால் தவெக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், இயற்கை மீது பழிபோடாமல் 24 மணி நேர மின்சாரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சிபிஎம் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை ஆளும் தவெக அரசு மீது பொதுமக்கள் மத்தியில் மிகக் கடுமையான அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும், காற்றின் மீதும் தண்ணீரின் மீதும் அநாவசியமாகக் குறைகளைச் சொல்லி மடைமாற்றம் செய்வதை விடுத்து, தட்டுப்பாடு இல்லாமல் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை அரசு போர்க்கால அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மிகக் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு நிலவி வருவதாகப் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் மத்தியில் புகார்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, இரவு நேரங்களிலும் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தூக்கமின்றித் தவித்து வருகின்றனர். இந்த நிர்வாகக் குளறுபடியைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரலெழுப்பி வரும் வேளையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆளும் தவெக அரசின் மெத்தனப் போக்கைக் கிழித்துத் தொங்கவிட்டு மிக விரிவான கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் தற்போது தலைவிரித்தாடும் மின்வெட்டுப் பிரச்சினை ஆளும் தவெக அரசின் மீது சாமானிய மக்கள் மத்தியில் உச்சக்கட்ட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை எந்தவித முன்னறிவிப்புமின்றி மணிக்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்படும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. அரசுத் தரப்பில் இதற்குப் பொறுப்பான விளக்கங்களை அளிப்பதற்குப் பதிலாக, காற்றாலைகள் போதிய அளவு சுழலவில்லை, காற்றாலை மின் உற்பத்தி சரிந்துவிட்டது என்பது போன்ற மழுப்பலான வினோதக் காரணங்களை தவெக அரசின் அமைச்சர்களும் அதிகாரிகளும் அடுக்கடுக்காகக் கூறி வருகின்றனர்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக அரசுக்கு சவால்.. செங்கோட்டையன் பேட்டிக்கு நடுவே பவர் கட்.. அப்செட்டான நிர்வாகிகள்!!
அரசின் மழுப்பல் பதில்களைக் கடுமையாகச் சாடிய அவர், "இயற்கையின் மீதும், காற்றின் மீதும், தண்ணீரின் மீதும் அப்பட்டமாகப் பழியைப் போட்டுத் தங்களது நிர்வாகத் தோல்விகளை மடைமாற்றம் செய்யப் பார்ப்பது ஒருபோதும் பொதுமக்களைத் திருப்திப்படுத்தாது. சீரான மின் உற்பத்தியையும் பகிர்மானத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு மேலாண்மை செய்ய வேண்டியது ஒரு மக்களாட்சி அரசின் தலையாய கடமையாகும். கோடைக்கு பிந்தைய பருவ மாற்றங்களை உணர்ந்து தேவையான மின் கொள்முதலைச் செய்யாமல் அலட்சியமாக இருந்துவிட்டு, இப்போது சாக்குப்போக்குகளைக் கூறுவது கண்டனத்திற்குரியது. எனவே, இனியும் வீண் காரணங்களை அடுக்காமல், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வேளாண் பாசனம் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, எவ்விதத் தட்டுப்பாடும் இல்லாமல் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் கிடைப்பதை அரசு உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும்" என்று திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். இடைத்தேர்தல் களத்தில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும் சூழலில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தின் இந்த காட்டமான அறிக்கை ஆளுங்கட்சிக்கு மேலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!