×
 

வீதியில் இறங்கிய 81 கிராம மக்கள்... அதிரடி போராட்டம்.... சிவகங்கையில் நடப்பது என்ன?

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களை மூட வலியுறுத்தி, 81 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரே இடத்தில் திரண்டிருப்பது திருவிழாவுக்காக அல்ல; புற்றீசல் போல் பெருகி வரும் கல்குவாரிகளையும் கிரஷர்களையும் மூடக்கோரி வலியுறுத்துவதற்காகத்தான்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளான வடவன்பட்டி, கட்டாணிப்பட்டி, ஜெயங்கொண்டநிலை உள்ளிட்ட கிராமங்களில் தனியார் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இதனால் காற்று மாசு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் சுவாசிக்க முடியாத நிலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயங்கொண்டநிலை, மலம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கல்குவாரி அமைக்க தனிநபர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே இயங்கி வரும் குவாரிகளை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தி, 41 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

“கல்குவாரிகளை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்துகிறோம். குவாரிகளில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதும், மணலை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுப்பதும் நீராதாரம் பாதிக்கப்படுவதற்கு காரணமாகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தொற்று நோய்கள் பரவும் நிலையும் ஏற்படுகிறது” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

“ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற செந்தூர் முருகன் குவாரியை தடை செய்ய வேண்டும். நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். எங்கள் பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கிற, இயங்க இருக்கிற கல்குவாரி மற்றும் மண் குவாரிகள் அனைத்தையும் நிரந்தரமாக மூடி, மைனிங் சோன் அல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறோம்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கல்குவாரிகளால் தினந்தோறும் சந்திக்கும் சிரமங்களை பாடியபடியும், பெண்கள் கும்மி அடித்தும், குலவையிட்டும் கவனத்தை ஈர்த்தனர்.

தொடர் போராட்டம் நடத்தியும், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள டி.கே. பிரபு தங்களது கோரிக்கைகள் குறித்து கண்டுகொள்ளவே இல்லை என கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக சிவகங்கை–திருப்பத்தூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "தவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள்"..! தவெக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..! தங்கம் தென்னரசு அறிவிப்பு.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share