#BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!
தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்
தமிழறிஞரும் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் காலமானார்.
மதுரை மாவட்டத்தில் பிறந்த சாலமன் பாப்பையா, தமிழ் ஆர்வலர்கள், பட்டிமன்ற பார்வையாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களிடையேயும் பெரும் புகழ் பெற்றவர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ள அவர், பல்வேறு தலைப்புகளில் நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
கடந்த 5-ஆம் தேதி சிவகாசியில் நடைபெற்ற சன் டிவியின் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவராகப் பொறுப்பேற்று அவர் நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பிய நிலையில், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை திடீரென மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வயது மூப்பு மற்றும் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!
சாலமன் பாப்பையாவின் மறைவு குறித்து பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சாலமன் பாப்பையாவின் வாழ்க்கையும் தமிழ்ப் பணியும்:
1936-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் சாத்தங்குடி அருகே பிறந்தவர் சாலமன் பாப்பையா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், பின்னர் தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தான் படித்த அமெரிக்கன் கல்லூரியிலேயே தமிழ்த் துறை பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
1990-களில் மேடைப் பேச்சாளராக தனது தமிழ்ப் பணியைத் தொடங்கிய அவர், பின்னர் தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் மூலம் தமிழக மக்களிடம் மேலும் பிரபலமானார். குறிப்பாக சன் டிவியில் அவர் நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சிகள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தன.
சமூகப் பிரச்சினைகள் மட்டுமின்றி, குடும்பம், அறம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நகைச்சுவையுடன் எளிமையான தமிழில் பேசும் திறமை அவருக்கு இருந்தது. சிரித்த முகத்துடன், எளிமையான தமிழ் சொல்லாடலுடனும், வட்டார வழக்கில் இயல்பாகப் பேசும் அவருடைய பேச்சு மக்களிடம் தனி வரவேற்பைப் பெற்றது.
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள சாலமன் பாப்பையாவின் தொடக்க உரையும் மிகவும் பிரபலமானது. குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் “அன்புத் தாய்மார்களே, அருமைப் பெரியோர்களே, இனிய குழந்தைகளே” என்று அவர் தொடங்கும் பேச்சு பல தலைமுறைகளாக மக்களின் நினைவில் நிற்கிறது.
இலக்கியப் பணி:
பட்டிமன்றங்களைத் தாண்டி எழுத்துப் பணியிலும் சாலமன் பாப்பையா முக்கியப் பங்காற்றியுள்ளார். திருக்குறள், அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்களுக்கு எளிய தமிழில் உரை எழுதியுள்ளார். பல்வேறு சங்க இலக்கிய நூல்களுக்கும் எளிமையான முறையில் உரைகளை எழுதியதுடன், உரைத் தொகுப்புகள் உள்ளிட்ட பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ் இலக்கியத்தை சாதாரண மக்களிடமும் கொண்டு சேர்த்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கடினமான இலக்கியக் கருத்துகளையும் எளிய தமிழிலும், நகைச்சுவையுடனும், சமூகச் சிந்தனையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
சினிமாவிலும் சாலமன் பாப்பையா:
சில தமிழ் திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்துள்ளார். ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களில் தோன்றி தனது தனித்துவமான பேச்சு மற்றும் நடிப்பால் கவனம் பெற்றார்.
தமிழ் இலக்கியம் மற்றும் கல்விக்காக ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது அவருக்கு 2021-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
பட்டிமன்றம் என்பது பெரியவர்களுக்கான நிகழ்ச்சி என்ற நிலையை மாற்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் நிகழ்ச்சியாக அதை மாற்றியதில் சாலமன் பாப்பையாவுக்கு முக்கிய பங்கு உண்டு.
கிட்டத்தட்ட 90 வயதிலும் தனது தமிழ்ப் பணியைத் தொடர்ந்து வந்த அவர், கடந்த 5-ஆம் தேதி சிவகாசியில் சன் தொலைக்காட்சி நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்தார்.
பல தலைமுறைகளுக்கு எளிய தமிழையும், இலக்கியத்தையும், நகைச்சுவையையும் கொண்டு சேர்த்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!