×
 

அமித் ஷா அருகே விஜய்... தொடங்கியது தென்மாநில முதல்வர்கள் மாநாடு... டி.கே.சிவக்குமாருக்கு காத்திருக்கும் சிக்கல்...!

கோவளத்தில் தொடங்கிய தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னை அருகே கோவளத்தில் இன்று தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, நதிநீர் பங்கீடு, எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறாத நிலையில், தற்போது 31வது மாநாடு சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கியுள்ளது.

இந்த மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு ஆகியவை மாநாட்டின் உறுப்பினர்களாக உள்ளன.

இதையும் படிங்க: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு... தமிழகம் வந்த அமித்ஷாவுக்கு திடீர் ஷாக் கொடுத்த புதுவை முதல்வர்...!

மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்த அமித்ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து கோவளத்துக்குச் சென்ற அவரை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற இரவு விருந்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தென் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, தொழில் முதலீடுகளை அதிகரிப்பது, மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசனை நடைபெற உள்ளது.

நீட் விவகாரம், தமிழகத்திற்கு தேவையான நிதியைப் பெறுவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக அவர் பேசலாம். அதேபோல், காவிரி நதிநீர் பிரச்சினையும் முக்கியமானதாக உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில், அந்த உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.கே.சிவக்குமாருக்கு சிக்கல்:

குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், கர்நாடகாவில் தமிழர்கள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள் ஒரே மாநாட்டில் சந்திக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல இருந்த நிலையில், தற்போதைய சூழல் சரியாக இல்லை என்றும், இப்போதைக்கு வர வேண்டாம் என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தற்போது சென்னைக்கு வந்திருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயும், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும் மாநாட்டின் போது தனியாக சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமித் ஷாவிடம் விஜய் வைக்கப்போகும் கோரிக்கை: 

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அனைத்து தென்மாநிலங்களையும் ஒருங்கிணைத்து தனிப்பட்ட டாஸ்க் போர்ஸ் அமைப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மற்றொரு மாநிலத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவது, அந்த மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் அதன் பரவலை அதிகரிக்கக்கூடிய வகையில் அமையும். எனவே, அதனைத் தடுத்து நிறுத்தும் பட்சத்தில் போதைப்பொருள் ஒழிப்பில் அது முக்கியப் பங்காற்றும். இதனைத் தடுக்கும் நோக்கில் டாஸ்க் போர்ஸ் அமைப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

அதேபோல், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி தொடர்பாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக முதலமைச்சர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக காவல்துறையைப் பொறுத்தவரை, காவல்துறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானதாக உள்ளது. தமிழக காவல்துறையில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. பல்வேறு காரணங்களால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், காவல்துறையை பலப்படுத்தவும், நவீனப்படுத்தவும் அதிகளவில் நிதி தேவைப்படுகிறது. எனவே, காவல்துறையை நவீனப்படுத்துவதற்கான நிதியையும் தமிழக முதலமைச்சர் கோருவார் என தகவல் கிடைத்துள்ளது.

 

 

இதையும் படிங்க: அந்த பக்கம் அமித் ஷா, இந்த பக்கம் டி.கே.எஸ்... ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பாரா விஜய்?... நாடே எதிர்பார்க்கும் தரமான சம்பவம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share