×
 

தென்மேற்கு பருவமழை குறையும்! ஜூனில் வெப்பஅலை தாக்கும்! தமிழகத்தை எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்யும். தமிழகத்தில் ஜூன் மாதம் வெப்பஅலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாகப் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்யும் மழையின் அளவு நாட்டின் சராசரியான 100 சதவீதத்தை விட 90 சதவீதமாக மட்டுமே இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 92 சதவீதம் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் குறைந்து 90 சதவீதமாக சரிந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மழைப்பொழிவு சராசரியாக இருக்கும் என்றாலும், மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் மழை கணிசமாகக் குறையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமேற்கு இந்தியாவில் 92 சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஜூன் மாதம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் எனவும், பருவமழை தாமதமாகவோ குறைவாகவோ பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய கணிப்பின்படி, மழைப்பொழிவு மேலும் குறைந்து கடுமையான வறட்சியாக மாறும் வாய்ப்பு 35 சதவீதம் உள்ளதாக IMD தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பலத்த காற்றுடன் அடித்து ஊற்றக் காத்திருக்கும் பேய்மழை!! 8 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்!!

இந்த மோசமான முன்னறிவிப்புக்கு முக்கிய காரணம் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடைவதாகும். இந்த ‘எல் நினோ’ போன்ற நிகழ்வு இந்தியப் பருவமழையை பலவீனப்படுத்துகிறது. விவசாயம், குடிநீர், மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளுக்கு இது பெரும் சவாலாக அமையும் என விவசாய வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். நீர் தேக்கங்களை முழுமையாக பயன்படுத்துதல், நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், வறட்சி தாங்கும் பயிர்களை விரிவாக சாகுபடி செய்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என விவசாயத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், அடுத்த சில வாரங்களில் மேலும் துல்லியமான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மக்கள் மற்றும் விவசாயிகள் வானிலை எச்சரிக்கைகளை உன்னிப்பாக கவனித்து செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை! 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share