வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை! 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கோவை, சேலம், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: மத்தியகிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரையிலான பகுதிகளில் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 26 முதல் மே 31 வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இடி, மின்னல், சூறைக்காற்று!! 22 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!! கொட்டக்காத்திருக்கும் கனமழை!
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: தெற்கு வங்கக்கடலில் புதன்கிழமை (மே 27) வரை சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மே 29 வரை இதே வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச மழை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 110 மி.மீ. பதிவாகியுள்ளது. காங்கயம் (திருப்பூர்) 90 மி.மீ, செட்டிகுளம் (பெரம்பலூர்), நந்தியாறு (திருச்சி) 70 மி.மீ, ஆனைப்பாளையம், தேன்கனிக்கோட்டை, கெத்தை, மேட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் 50 முதல் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது, மே 29 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயர வாய்ப்புள்ளது. மக்கள் மழை நீர் தேங்கும் பகுதிகளில் கவனமுடன் இருக்கவும், இடி மின்னல் ஏற்படும் சமயங்களில் பாதுகாப்பான இடங்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விவசாயிகள், சாலைப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை உன்னிப்பாக கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை!! நெல்லையில் 168 மி.மீட்டரில் கனமழை பதிவு!