சாதி ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம்! திமுக என்ன செய்தது? என அமைச்சர் வன்னியரசு கேள்வி!
விசிக உள்ள அணிதான் உண்மையான இடதுசாரி அணி என்றும் சாதி ஆணவப் படுகொலைக்கு விரைவில் தனிச்சட்டம் வரும் என்றும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி இயக்கங்களும் அங்கம் வகிக்கும் அணி மட்டுமே உண்மையான இடதுசாரி அணி என்றும், சமூக நீதியையும் வளர்ச்சியை நோக்கிய அரசியலையும் தவெக முன்னெடுப்பதால் அக்கட்சியுடன் இணைந்து பயணித்து வருவதாகவும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கிடங்கள் ஏரியைத் தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தவெக அரசு சட்டமன்றத்தைச் சர்க்கஸ் கூடாரமாக மாற்றிவிட்டது என்ற உதயநிதியின் விமர்சனம் குறித்துக் கேட்கப்பட்டதற்கு, உதயநிதியும் சட்டமன்றத்தில்தான் இருக்கிறார்; அவரையும் சேர்த்துதான் அப்படிச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை. வளர்ச்சி சார்ந்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைப்பதே நல்லது; முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தமிழகத்தை வளப்படுத்தவும் வலிமைப்படுத்தவும் வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார் எனக் குறிப்பிட்டார்.
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவது குறித்துப் பேசிய அவர், விசிகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில்தான் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து விரைவில் தனிச்சட்டம் கொண்டுவரப்படும்; அதனை முதலமைச்சரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
இதையும் படிங்க: மனித கழிவுகளால் மீன்கள் சாகவில்லை!அமைச்சர் கருத்தை எதிர்த்து 8 கிராம மீனவர்கள் கொந்தளிப்பு!
சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க கடந்த திமுக ஆட்சியில் தனிச்சட்டம் கேட்டு நாங்கள் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது திமுக அரசு எந்தப் பதிலும் கூறாமல் மவுனம் காத்தது; ஆனால் நாங்கள் வெறும் கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனைச் சட்டமாகக் கொண்டுவரத் தீவிர முயற்சி எடுத்து வருகிறோம் எனச் சாடினார்.
தொடர்ந்து விசிக மற்றும் தவெக கூட்டணி குறித்துப் பேசிய அமைச்சர் வன்னியரசு, பத்தாண்டுகளாக திமுகவுடன் இணைந்து செயல்பட்டதாகவும், தற்போதைய அரசியல் சூழலில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் தவெகவுடன் இணைந்து பயணிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் முதல்வரும்தான் நாட்டை ஆள வேண்டுமே தவிர, அதிகாரிகள் நாட்டை வழிநடத்த முடியாது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தின் கருத்து முற்றிலும் சரியானது என்றும், தவெகவை முழுமையான இடதுசாரி அரசியலை முன்னெடுக்கும் தளமாக நிலைநிறுத்துவதே தங்களின் நிலைப்பாடு என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் நாளை பதில் தருவார்! சட்டப்பேரவை குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி!