முருகனை தரிசிக்க ரெடியா மக்களே..!! நெல்லை டூ திருச்செந்தூர்.. வைகாசி விசாக விழா சிறப்பு ரயில்கள்..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் நாளை வைகாசி விசாகம் திருவிழா நடைபெற உள்ள நிலையில், அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் சென்று வழிபடுவார்கள். குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் மக்கள் அலைகடலென திரண்டு முருகனை மனமுருகி தரிசித்து விட்டு செல்வார்கள்.
இந்நிலையில் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, ஜூன் 9ம் தேதி நாளை (திங்கட்கிழமை) பக்தர்களின் வசதிக்காக நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே நான்கு சிறப்பு முன்பதிவில்லாத பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை வைகாசி விசாகம்.. இன்று விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.. திருச்செந்தூரில் சோகம்..!
தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து திருநெல்வேலி வந்து அங்கிருந்து திருச்செந்தூர் செல்வார்கள். எனவே திருநெல்வேலியில் இருந்து ஆண்டுதோறும் இது போன்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
06101 என்ற எண் கொண்ட ரயில், நெல்லையில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
06102 என்ற எண் கொண்ட ரயில் திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 12.55 மணிக்கு நெல்லை வந்தடையும்.
06103 என்ற எண் கொண்ட ரயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
06104 என்ற எண் கொண்ட ரயில் நெல்லையில் இருந்து இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்.
மேலும் இந்தச் சிறப்பு ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகாசி விசாகத்திற்குத் திருச்செந்தூர் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.
இதனிடையே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணிமுதல் நாளை மறுதினம் காலை 6 மணிவரை கோயில் வளாகத்தில் உள்ள பிஆர்ஓ அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்கு கைப்பட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைப்பட்டையை அணிந்த மூத்த குடிமக்கள் மட்டும் தனி வரிசை முறையில் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. திருச்செந்தூரில் கடலலையாய் திரண்ட பக்தர்கள்..!