ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? ஐகோர்ட் கேள்வி!
நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரையின்படி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு முன்வருமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரையின்படி அப்போதைய ஐ.ஜி, டி.ஐ.ஜி, எஸ்.பி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது மீண்டும் துறைரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்குமா எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடைபெற்ற பேரணியின் போது, காவல்துறையினர் எவ்வித முன்னறிவிப்புமின்றி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் சீருடை அணியாத துப்பாக்கிச் சுடும் வீரர்களைக் கொண்டு அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாகச் சிபிஐ விசாரணை கோரியும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதையும் படிங்க: அறங்காவலர் குழுவை புறக்கணித்தது யார்? மதுரை மீனாட்சியம்மன் கோவில் வழக்கில் ஐகோர்ட் கேள்வி!
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று தீவிர விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் விவரங்களைச் சுட்டிக்காட்டினார்.
அதில், காவல்துறை தரப்பில் அப்பட்டமான வரம்பு மீறல் நடந்துள்ளது; 17 காவல் அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் 3 வருவாய் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹10 லட்சமும் இழப்பீடாக வழங்கப் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், காயங்களால் உயிரிழந்த ஜஸ்டின் செல்வா மிதிஷ் என்பவரின் தாயாருக்கு அரசு வேலைவாய்ப்பும் இழப்பீடும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், முந்தைய ஆட்சியில் சில அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டன; ஓய்வுபெற்ற அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன என்று தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போதைய அரசில் உள்ளவர்கள் முந்தைய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றனர் என வாதிட்டனர். இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், நாங்கள் யார் மீதும் பழி சுமத்தவில்லை, நடந்த உண்மை நிலவரத்தை மட்டுமே சுட்டிக்காட்டுகிறோம் என்றார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, நடந்தது நடந்துவிட்டது; இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் கேள்வி. அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை மீண்டும் கையில் எடுத்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய முன்வருமா? குறிப்பாக அப்போதைய எஸ்.பி மகேந்திரன், டி.ஐ.ஜி கபில்குமார் சரக்கர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே, அதை மீண்டும் பரிசீலிக்க முடியுமா?
ஆணையத்தின் அறிக்கை அரசைக் கட்டுப்படுத்தாது என்றாலும், அதனை அரசு பரிசீலிக்க முடியும். எனவே, இதுதொடர்பாக அரசிடம் உரிய அறிவுறுத்தல்களைப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மின்சாரத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு! சிஐடியு சார்பில் நாளை முதல் தொடர் போராட்டம்!