காரைக்கால் மீனவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ராமேஸ்வரம் மீனவர்கள் ஆவேசம்!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 10 பேரை, ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடித்து வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இவர்கள் சுமார் 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன்பிடிக்கும் முறையை (Stay Fishing) பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் மீனவர்கள், இலங்கை கரையோரப் பகுதிகள் மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பதால், அங்குள்ள இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதி மீனவர்களின் மீன்பிடி உரிமைகளும் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில், கச்சத்தீவு அருகே காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ராமேஸ்வரத்திலிருந்து சென்ற இரண்டு விசைப்படகு மீனவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். காரைக்கால் மீனவர்களின் ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 10 மீனவர்களையும் சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள், அவர்களை நடுக்கடலிலிருந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: காரைக்காலில் கொட்டும் கனமழை! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தொடர்ந்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகையும் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளும், போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து தமிழகக் கடலோரப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்களிடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் இலங்கை கடற்படை அட்டகாசம்! ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!