கவனத்தை ஈர்த்த மாணவர் பாரதிதாசன்... முழு உதவித்தொகை விடுவிப்பு..! தமிழக அரசு நடவடிக்கை..!!
மாணவன் பாரதிதாசனுக்கு முழு உதவி தொகையும் தமிழக அரசு வழங்கியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த இளைஞர் பாரதிதாசன், தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவின் தேசியப் பல்கலைக்கழகத்தில் திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்க மருத்துவம் என்ற துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவர், வெளிநாட்டில் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக முப்பத்தாறு லட்சம் ரூபாய் வரை வழங்கும் இந்தத் திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெறத் தகுதி பெற்றார்.
முதலாம் ஆண்டில் கல்விக் கட்டணம், விசா, விமானக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களுக்காக மொத்தம் முப்பத்தாறு லட்சம் ரூபாய் அரசால் விடுவிக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு தொடங்கிய பின்னர், ஆராய்ச்சிக்குத் தேவையான கூடுதல் நிதி கிடைக்காததால் தனது ஆய்வுப் பணிகள் தடைபட்டதாகவும், பல்கலைக்கழகக் கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்படும் அபாயம் இருப்பதாகவும் பாரதிதாசன் சமூக வலைதளங்களில் உணர்ச்சிபூர்வமான காணொளி ஒன்றை வெளியிட்டார்.
கடந்த சில மாதங்களாக நிதி கேட்டு மனு செய்தும் பதில் கிடைக்காததால் தனது கல்வி வாய்ப்பு ஆபத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.இந்தக் காணொளி பரவியவுடன் விவகாரம் பெரும் கவனத்தை ஈர்த்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மாணவரின் கல்வியைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதேநேரம், சமூக நீதித் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. முதலாம் ஆண்டில் முப்பத்தாறு லட்சம் ரூபாயும், இரண்டாம் ஆண்டில் பல்கலைக்கழகக் கட்டணமாக ஐந்து லட்சத்து ஐம்பத்தேழாயிரம் ரூபாயும் வாழ்க்கைச் செலவாக ஆறு லட்சத்து அறுபத்தைந்தாயிரம் ரூபாயும் என மொத்தம் பன்னிரண்டு லட்சம் ரூபாயும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து சுமார் நாற்பத்தெட்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெளிவுபடுத்தியது.
இதையும் படிங்க: சிறிய இரத்த பரிசோதனை நிலையங்களை பாதுகாக்க அரசாணை எண் 41-ஐ ரத்து செய்க! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
மேலும், ஆராய்ச்சிப் பொருட்களுக்காக மாணவர் கோரிய கூடுதல் தொகை தொடர்பாக பல்கலைக்கழகத்திடமிருந்து பரிந்துரை மற்றும் ஆவணங்கள் தேவைப்படுவதாகவும், அவை கிடைத்தவுடன் நிதி விடுவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, பாரதிதாசனைத் தனது தம்பியாகக் கருதுவதாகவும், அவரது படிப்பு முழுமையாகத் தொடர அரசு அனைத்து வகையிலும் உதவும் என்றும் உறுதியளித்தார். மீதமுள்ள ஆராய்ச்சி நிதி இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். எந்தவித அரசியல் நோக்கமும் இல்லாமல் அனைத்து மாணவர்களின் கல்விக்கும் ஆதரவு அளிப்பதே அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் மாணவர் பாரதிதாசனுக்கு முழு உதவித்தொகையும் விடுவிக்கப்பட்டது. முன்னதாக 12 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய 23 லட்சத்து 95 ரூபாயும் ஒரே நாளில் விடுவிக்கப்பட்டது. வாழ்க்கை செலவுத் தொகை 6 லட்சம் ரூபாய் மாணவன் வங்கி கணக்கிற்கும் ஆராய்ச்சி கல்விக்கான 17 லட்சம் ரூபாய் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: ஊருக்கு தான் உபதேசமா விஜய்.? மீனவ மக்களுக்கு துரோகம்... அப்பாவு காட்டம்..!!