×
 

சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

சென்னையில் பெய்த திடீர் கனமழையால் 9 விமானங்கள் வானில் வட்டமடித்தன; சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்கள் தாமதமாகி பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று இரவு திடீரென வீசிய பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு சுமார் 7:45 மணி முதல் 8:15 மணி வரை திடீரென இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாகப் பார்வைத் திறன் குறைந்து ஓடுதளத்தில் கடுமையான வானிலை நிலவியதால், சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. 

அந்த நேரத்தில் சென்னையில் தரையிறங்க வந்த துபாய், இலங்கை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மைசூரு உள்ளிட்ட 9 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலேயே வட்டமடித்துத் தத்தளித்தன.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை: அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

அதேபோல், சென்னையில் இருந்து புறப்படத் தயாராக இருந்த இலங்கை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், திருச்சி, கோவை உள்ளிட்ட 11 விமானங்கள் உரிய நேரத்தில் புறப்பட முடியாமல் ஓடுதளத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் மழை மற்றும் சூறாவளிக் காற்றின் வேகம் குறைந்ததைத் தொடர்ந்து, வானில் வட்டமடித்த விமானங்கள் ஒவ்வொன்றாகப் பாதுகாப்பாகத் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. 

மேலும், புறப்பட வேண்டிய விமானங்களும் சுமார் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. அரை மணி நேரம் நீடித்த இந்தத் திடீர் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் வருகை மற்றும் புறப்பாடு என மொத்தம் 20 விமானங்கள் தாமதமாகி பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையும் படிங்க: 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share