சென்னையில் சூறைக்காற்றுடன் கொட்டிய திடீர் மழை! 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தத்தளிப்பு!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை பெய்த திடீர் சூறைக்காற்று மழையால் சென்னை விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை திடீரெனப் பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வான்வழிப் போக்குவரத்து உள்கட்டமைப்பு பெருமளவு பாதிக்கப்பட்டு, சுமார் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ஸ்தம்பித்தன.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தபடி, வான்பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று மாலை சென்னை, தாம்பரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திடீரெனப் பலத்த சூறைக்காற்றுடன் இடி மின்னல் கலந்த கனமழை பெய்தது. இந்த திடீர் கால நிலை மாற்றம் காரணமாக, அந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வான் எல்லைக்குள் வந்த 10-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் பலத்த சூறைக்காற்றினால் ரன்வேயில் தரையிறங்க முடியாமல் போயின.
குறிப்பாக, சீரடியில் இருந்து 152 பயணிகளுடன் வந்த விமானம், ஹைதராபாத்தில் இருந்து 170 பயணிகளுடன் வந்த விமானம், திருச்சியில் இருந்து 64 பயணிகளுடன் வந்த விமானம், தூத்துக்குடியில் இருந்து 70 பயணிகளுடன் வந்த விமானம், கண்ணூரில் இருந்து 84 பயணிகளுடன் வந்த விமானம் மற்றும் டெல்லியில் இருந்து 162 பயணிகளுடன் சென்னை வந்த பயணிகள் விமானம் உள்ளிட்ட 10 விமானங்கள் தரையிறங்க அனுமதியின்றி வான்பரப்பிலேயே நீண்ட நேரம் வட்டமடித்துத் தத்தளித்தன. இந்த விமானங்கள் அனைத்தும் சென்னை புறநகர்ப் பகுதிகள் மற்றும் மெரினா கடற்கரை வான்வெளிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்து கொண்டிருந்தன. பின்னர், சூறைக்காற்று ஓய்ந்து வானிலை ஓரளவுக்குச் சீரடைந்ததைத் தொடர்ந்து ஏடிசி (ATC) கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டுதலின்படி, அந்த விமானங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டன.
இதையும் படிங்க: ரம், விஸ்கி, வோட்கா பிளேவரில் ஐஸ்கிரீமா? சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!
இதேபோல், சென்னையில் இருந்து டெல்லி, மைசூர், பெங்களூர், கொல்கத்தா, தூத்துக்குடி, கோவை, ஹைதராபாத், விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குப் புறப்பட வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரன்வேயில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாகச் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. வெறும் அரை மணி நேரம் பெய்த இந்த திடீர் மழையினால் சென்னை விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு என ஒட்டுமொத்தமாக 20 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான நுகர்வோர் மற்றும் பயணிகள் விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதையும் படிங்க: சென்னை மக்களே கவனிங்க..! சொத்து வரி வசூலுக்கு அதிரடி... சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!