×
 

சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

எல் நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு நிலவும் 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) காலநிலை காரணமாக 12 மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்திக்கக்கூடும் என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், காலநிலை மாற்றத்தால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் கூறுகையில், இந்த ஆண்டு உருவாகியுள்ள 'சூப்பர் எல் நினோ' நிகழ்வால் நாடு முழுவதும், குறிப்பாக குறுவை சாகுபடி பருவத்தில் கணிசமான பாதிப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டிலும் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதால், அதற்கான முன்தயாரிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

இதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 'மாவட்ட வேளாண்மை இடர் ஏற்பாட்டுத் திட்டம்' (District Agricultural Contingency Plan) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அந்தத் திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் எல் நினோ எச்சரிக்கை... அரசின் அதிரடி முடிவு! கண்காணிப்பு குழுவில் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்!

மேலும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பெங்களூரா ரக மாம்பழத்திற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதையடுத்து, மத்திய அரசின் சந்தை இடையீட்டுத் திட்டத்தின் கீழ் விலை வித்தியாசத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு கருத்துருவை அனுப்பியதாகவும், அதற்கு முதல் முறையாக மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், திட்டத்திற்கான நடைமுறைகள் முழுமையாக அமலுக்கு வரும் முன்பே பெங்களூரா ரக மாம்பழ அறுவடை நிறைவடைந்ததால், 6 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்ய முடிந்ததாக அமைச்சர் கூறினார். ஆனால் இனி இதுபோன்ற சூழ்நிலைகளை விரைவாக எதிர்கொள்ள தேவையான நடைமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு உடனடி உதவி வழங்க வேளாண்மைத் துறை முழுமையாக தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.

காலநிலை மாற்றத்தால் உருவாகும் சவால்களை சமாளிக்கவும், விவசாயிகளின் இழப்புகளை குறைக்கவும் அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்திருப்பது வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்... எந்த பயிருக்கு எவ்வளவு நிதி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share