நவோதயா பள்ளிகளுக்கு 3 மாதங்களில் இடம் தேர்வு செய்க! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!
நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கான இடங்களை 3 மாதங்களுக்குள் அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்குவதற்குத் தேவையான நிலங்களை அடுத்த 3 மாத காலத்திற்குள் தமிழக அரசு அடையாளம் காண வேண்டும் என்றும், தற்போது தமிழ்நாட்டில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதால் அணுகுமுறையிலும் மனநிலையிலும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை எதிர்பார்ப்பதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிடக் கோரி குமரி மகாசபை தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காரசாரமான வாதங்களுடன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களை அடையாளம் காண பிறப்பித்த முந்தைய உத்தரவை அரசு ஏன் இதுவரை செயல்படுத்தவில்லை? கிராமப்புற அடித்தட்டு மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வழிசெய்யும் நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் அனுமதிப்பதில் என்ன தயக்கம்? எதற்காக இத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கிறீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
நீதிபதிகளின் கேள்விகளுக்குத் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிடுகையில், போதிய பள்ளி உள்கட்டமைப்புகள் இல்லாத பிற மாநிலங்களில் நவோதயா பள்ளிகளை நிறுவலாம். ஆனால், நாட்டிலேயே முன்னோடியாகத் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் தலைசிறந்த கல்வி தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே மிகச் சிறந்த கல்விக் கட்டமைப்பைக் கொண்டுள்ள தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்பதே மாநில அரசின் கொள்கை முடிவு. மேலும், நவோதயா பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்துகின்றன; இது தமிழகத்தில் சட்டப்பூர்வமாக நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் முரணானது. கல்வி பொதுப்பட்டியலில் இடம்பெற்றிருப்பதால், ஒரு திட்டத்தை மாநிலத்தின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது என்று அழுத்தமாக வாதிட்டார்.
தமிழக அரசின் வாதங்களுக்கு எதிர்வினையாற்றிய நீதிபதிகள், பொதுப்பட்டியலில் உள்ள ஒரு மத்திய அரசின் திட்டத்தை ஏற்க முடியாது என ஒவ்வொரு மாநிலமும் தனிப்பாதையில் பயணித்தால் நாட்டின் கூட்டாட்சித் தத்துவமும் இயக்கமும் என்னவாகும்? மத்திய அரசின் கல்வி நிறுவனங்களை மாநிலத்தில் காலூன்ற விடமாட்டோம் என்று கூறுகிறீர்களா? மொழிக் கொள்கைதான் முட்டுக்கட்டை என்றால், இந்திக்குப் பதிலாக வேறு ஒரு இந்திய மொழியைப் பயிற்றுவிக்க பேச்சுவார்த்தை நடத்தலாமே? தமிழக அரசு பிடிவாதப் போக்கைக் கைவிட்டு, பரஸ்பர மரியாதையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு, இது மனநிலை சார்ந்த விவகாரமல்ல, தமிழகத்தின் இருமொழிக் கொள்கை கோட்பாடு சார்ந்தது. இதில் சமரசம் செய்ய முடியாது. மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காகத் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,000 கோடிக்கும் மேலான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்து அச்சுறுத்துகிறது என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியதர்ஷினி, சிபிஎஸ்இ தேர்வுகளில் நாட்டிலேயே அதிக தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்யும் நவோதயா பள்ளிகளைப் புதுச்சேரி கூட ஏற்றுக்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழகத்தின் கல்வித் தரம் மிகவும் உயர்ந்தது, டெல்லியை விடச் சென்னையில் கல்வித் தரம் எதிலும் குறைந்ததல்ல; அதற்காகப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.
அதேவேளையில் தமிழ்நாட்டின் கல்வி மகுடத்தில் மற்றொரு மாணிக்கமாக நவோதயா பள்ளிகள் அமைவதில் என்ன தவறு? மத்திய அரசின் கொள்கையை ஏற்பதால் அவர்களிடம் சரணடைந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. மாநிலத்தில் தற்போது புதிய ஆட்சி மாறியுள்ளதால், அணுகுமுறையிலும் மனநிலையிலும் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் என்று விசாரணையின் போது 4 முறை சுட்டிக்காட்டினர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த இறுதி உத்தரவில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்காக நிலங்களை அடையாளம் காண ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றத் தமிழக அரசுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. நவோதயா பள்ளிகளை அமைப்பதில் உள்ள மொழிக் கொள்கை உள்ளிட்ட முரண்பாடுகளைக் களைய மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டாக அமர்ந்து சுமூகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இந்தப் பேச்சுவார்த்தை மாநில அரசின் கொள்கைக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில் அமைய வேண்டும். அத்துடன், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் கல்வி நிதி ரூ.5,000 கோடியை விடுவிப்பது குறித்தும் இருதரப்பும் பேசி உடன்பாடு எட்ட வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் டிசம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!