தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் விசாரணை ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்தச் சட்டபூர்வக் கடமையில்லை என அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாதிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்பது சட்டபூர்வமான கடமை கிடையாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ பரிந்துரையின் பேரிலேயே அதிகாரிகள் மீதான துறைரீதியான நடவடிக்கை கைவிடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போது உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
விசாரணையின் போது அரசு தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கை கடந்த ஆட்சியின் போதே ஏற்றுக்கொள்ளப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆணையம் ரூ.50 லட்சம் பரிந்துரைத்திருந்தாலும், பரிந்துரைகளை அப்படியே முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற சட்டபூர்வ கட்டாயம் அரசுக்கு இல்லை. மேலும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே துறைரீதியான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன என்று குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிபிஐ இந்த வழக்கை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வருகிறது; எனவே சிபிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய வேண்டும். மேலும், கரூர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற உத்தரவைப் போல, இந்த வழக்கிலும் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள சூழலில் தற்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது எனக் கூறி விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கடைகளின் பெயர்களை தமிழில் மாற்றுக! உயர்நீதிமன்ற உத்தரவை அரசு உடனே செயல்படுத்த சீமான் வலியுறுத்தல்!
இதையும் படிங்க: கோயில்களில் செல்போனுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது! முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!