×
 

காலியான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படும்! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் மீண்டும் தமிழகத்திடமே ஒப்படைக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான காலியிடங்களை அகில இந்தியத் தொகுப்பிற்கு மாற்றிய விவகாரம் தொடர்பான வழக்கில், நிரம்பாமல் காலியாக உள்ள அனைத்து இடங்களும் மீண்டும் தமிழ்நாடு அரசிடமே ஒப்படைக்கப்படும் என்றும், கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தைக் குறைப்பது குறித்து அடுத்த செவ்வாய்க்கிழமை முடிவெடுக்கப்படும் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்தும், அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் தீவிர விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக மீண்டும் ஒரு சுற்று கலந்தாய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தைக் குறைப்பது தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமைக்குள் உரிய முடிவு எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். 

இதையும் படிங்க: சுருக்குமடி வலை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு..!!

அதேநேரம், தமிழ்நாடு அரசால் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட இடங்களில் நிரம்பாமல் காலியாக இருக்கும் அனைத்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களும் மீண்டும் தமிழ்நாடு அரசிடமே முறைப்படி ஒப்படைக்கப்படும். இருப்பினும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்குத் தனியாக உள் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பதே மத்திய அரசின் கொள்கை ரீதியான நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

இதற்குத் தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (Tamil Nadu Medical Officers Association) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் காரசாரமாக எதிர்ப்புத் தெரிவித்துப் பதில் வாதங்களை முன்வைத்தார். கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களுக்குத் தரமான உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற மிக உன்னதமான, புனிதமான நோக்கத்திற்காகவே தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்புப் படிப்புகளில் முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

அரசு மருத்துவர்களுக்கு இத்தகைய சிறப்பு இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் தாராளமாக வழங்கலாம் என்பதை உச்சநீதிமன்றமே தனது முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளில் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, அந்த உத்தரவுகளையும் கொள்கை முடிவுகளையும் தற்போது நிலுவையில் உள்ள இட மாற்ற வழக்கோடு தேவையற்ற முறையில் முடிச்சுப் போட்டுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று ஆணித்தரமாக வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் அமர்வு, காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை முழுமையாக நிரப்பும் வகையில் கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதம் எவ்வளவு குறைக்கப்பட உள்ளது என்பது குறித்த தெளிவான முடிவை வரும் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் விரிவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: நீட் போராட்ட மாணவர் வழக்குகள் ரத்து! உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share