×
 

காவிரி விவகாரத்தில் தலையிட முடியாது! தமிழகத்தின் மனுவை செப். 15-க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

காவிரியில் உரிய நீரைத் திறக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கை செப்டம்பர் 15-க்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், கள நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்திற்கு உரிய பற்றாக்குறை நீரை உடனடியாகத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளில் உடனடியாகத் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய அறிவுறுத்தலின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் கூடுதல் நீர் கேட்டு முறையிட்டோம்; ஆனால், எங்களது நியாயமான கோரிக்கையை நிராகரித்துவிட்டு வினாடிக்கு 9,000 கன அடி மட்டுமே திறக்க ஆணையம் உத்தரவிட்டது. 

அந்த உத்தரவைக் கூட கர்நாடக அரசு முழுமையாகச் செயல்படுத்துவதில்லை. கர்நாடக அணைகளில் 73 டிஎம்சி நீர் உள்ள நிலையிலும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கின்றனர். இதனால் 24 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயப் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆணையம் மீண்டும் கூடுவதற்கு 15 நாட்கள் ஆகும் என்பதால், இந்த வாரமே ஆணையத்தைக் கூட்டித் தமிழகத்திற்குரிய நீரைத் திறக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதையும் படிங்க: 17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

இதற்குப் பதிலளித்த கர்நாடக அரசுத் தரப்பு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரியில் வினாடிக்கு 9,000 கன அடிக்கும் அதிகமாகவே தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது; கர்நாடகாவில் நிலவும் கடுமையான வறட்சிச் சூழலிலும் நீர் இருப்புக்கு ஏற்பத் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒருமுறை கூடி கள நிலவரத்தை ஆய்வு செய்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் நிலையில், இதில் உச்ச நீதிமன்றம் ஏன் தன்னிச்சையாகத் தலையிட வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினர். 

வழக்கை அடுத்த வாரமே அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், அடுத்த விசாரணையின் போது தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் திறப்பு நிலவரம் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: இறங்கி வந்த கர்நாடகா.. தமிழகத்தை நோக்கி மீண்டும் பாய்கிறது காவிரி! நீர்திறப்பு அதிகரிப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share