தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!
தமிழகத்தில் பிஇ, பிடெக் பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், அரசு ஒதுக்கீட்டில் 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான சிறப்புப் பிரிவு, பொதுக் கலந்தாய்வு மற்றும் துணைக் கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து சேர்க்கை நடைமுறைகளும் நிறைவடைந்துள்ளன. அரசு ஒதுக்கீட்டுக்கான 2 லட்சத்து 824 இடங்களில் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 280 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 47 ஆயிரத்து 544 இடங்கள் காலியாக உள்ளன. துணைக் கலந்தாய்வு மூலம் பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்டு, இறுதி ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 421 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் மொத்தமுள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்து 161 இடங்களில், அரசு ஒதுக்கீட்டிற்கு 2 லட்சத்து 824 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 67 ஆயிரத்து 337 இடங்களும் ஒதுக்கப்பட்டன. ஜூலை 1 அன்று 2,36,017 மாணவர்களுக்குத் தரவரிசை வெளியிடப்பட்டு மூன்று சுற்றுக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளி 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 14,931 இடங்களும், பொதுப்பிரிவில் 1,29,364 இடங்களும் என 1,44,295 இடங்கள் நிரம்பின.
இதையும் படிங்க: சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம்: சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!
விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் 31 வரை துணைக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கல்வியியல் பாடத்தில் 194 முதல் 78.25 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற 8,823 பேருக்கும், தொழிற்கல்வியில் 129 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. அரசுப் பள்ளி 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்வியியல் பிரிவில் 161.5 முதல் 82.5 வரை கட்-ஆப் பெற்ற 21 மாணவர்களுக்கும், தொழிற்கல்வியில் 12 மாணவர்களுக்கும் இடங்கள் கிடைத்துள்ளன. இம்மாணவர்களுக்கு அரசின் முழுக் கல்வி உதவித்தொகை கிடைக்கும் நிலையில், முறையான வழிகாட்டுதல் இல்லாததால் பல சிறந்த மாணவர்கள் துணைக் கலந்தாய்வை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!