38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!
தமிழகம் முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ₹1.18 கோடி கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஜி-பே பரிவர்த்தனைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சப் பேர்வழிகளைப் பிடிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று நடத்திய பிரம்மாண்ட மின்னல் வேகச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் ரூ.28.24 லட்சமும், நவீனத் தொழில்நுட்பமான ஜி-பே (G-Pay) மூலமாகப் பெறப்பட்ட ரூ.89.89 லட்சம் மதிப்பிலான லஞ்சப் பணப் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டு, ஒட்டுமொத்தமாக ரூ.1 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரத்து 908 ரூபாய் சிக்கியுள்ளது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் (BDO), வட்டாரப் போக்குவரத்து சோதனைச்சாவடிகள் (RTO), மின்வாரிய அலுவலகங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் முறைகேடான பணப் பரிவர்த்தனைகளும் லஞ்ச வசூலும் தங்குதடையின்றி நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அடுத்தடுத்து ரகசியத் தகவல்கள் குவிந்தன.
இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து தமிழகத்தின் 38 முக்கிய அரசு அலுவலகங்களில் இன்று ஒரே நேரத்தில் புகுந்து அதிரடி லஞ்ச வேட்டை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
அதிகாரிகள் நடத்திய அதிரடித் தணிக்கையில், அலுவலக மேசைகள், ஆவணக் கோப்புகள், மறைவிடங்கள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரொக்கப் பணம் ரூ.28,24,945/- பறிமுதல் செய்யப்பட்டது. ரொக்கமாக லஞ்சம் வாங்குவதைத் தவிர்த்து, ஆய்வாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக கூகுள்-பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் அரசு ஊழியர்கள் பெற்றிருந்த அதிர்ச்சி தரும் வகையிலான ரூ.89,89,663/- சந்தேகத்திற்குரிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகாரிகள் துல்லியமாகக் கண்டறிந்து முடக்கினர்.
குறிப்பாக, சென்னை கிண்டியில் உள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ.31.52 லட்சமும், திருச்சி மின் பகிர்மான அலுவலகத்தில் ரூ.13.58 லட்சமும், நீலகிரி, கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் அலுவலகங்களிலும் லட்சக்கணக்கில் கணக்கில் வராத தொகைகள் கண்டறியப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகையான ரூ.1,18,14,908/- தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் புரோக்கர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துருவித் துருவி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், முறைகேட்டில் சிக்கிய அனைத்து அலுவலர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
இதையும் படிங்க: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..! உஷார் மக்களே.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!