தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..! உஷார் மக்களே.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கும் முன்பே பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1 வகை காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் வெறும் 19 ஆக இருந்த பாதிப்புகள் தற்போது 339 ஆக உயர்ந்துள்ளன. சுகாதாரத்துறை இந்நிலையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பன்றிக்காய்ச்சல் என்பது எச்1என்1 வைரஸால் ஏற்படும் தொற்று நோய். இது இருமல், தும்மல் போன்ற செயல்களின் போது வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. தொற்று உள்ள பொருட்களைத் தொட்டுவிட்டு கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடும்போதும் இது பரவ வாய்ப்புள்ளது.
அறிகுறிகளாக காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிதல், சோர்வு, தலைவலி ஆகியவை காணப்படும். சிலருக்கு உடல்வலி, சோர்வு அதிகமாக இருக்கலாம்.சுகாதாரத்துறை அதிகாரிகள் லேசான சளி, காய்ச்சல், இருமல் அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். அறிகுறிகள் இருப்பவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!
கைகளை சோப்பு போட்டு அடிக்கடி சுத்தமாகக் கழுவுவது அவசியம். இருமும்போதும் தும்மும்போதும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது.பெரும்பாலான பாதிப்புகள் லேசானவை என்றாலும், வயதானவர்கள், சிறுகுழந்தைகள், நீண்டகால நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. சுகாதாரத்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களையும் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை! மீனவர்களுக்கு சூறாவளி காற்று எச்சரிக்கை!