×
 

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்துள்ளதால், அங்குள்ள வியாபாரிகள் ஆந்திரா மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு வந்து அரிசியை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகத்தில் அரிசி விலை திடீரென உயர்ந்து வருவதால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் நெல் விளைச்சல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்தைக்கு வரும் அரிசியின் வரத்து பாதிக்கப்பட்டு, பல்வேறு ரகங்களின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

சென்னையின் கோயம்பேடு பகுதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளின் தகவலின்படி, தமிழகத்திற்கு தஞ்சாவூர் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் அரிசி மற்றும் நெல் வரத்து உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் விளையும் பொன்னி சன்னரக அரிசிக்கு தமிழகத்தில் அதிக வரவேற்பு உள்ளது.

தற்போது கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்துள்ளதால், அங்குள்ள வியாபாரிகள் ஆந்திரா மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு வந்து அரிசியை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் தமிழக சந்தையில் அரிசிக்கான தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்! ஒரே மாதத்தில் அரிசி, மளிகை விலை விர்ர்ர்ர்! கடும் சிக்கலில் நடுத்தர குடும்பங்கள்!

இதன் காரணமாக 26 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.1,400-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்ந்துள்ளது. 10 கிலோ பாக்கெட் ரூ.650-ல் இருந்து ரூ.800 ஆகவும், 5 கிலோ அரிசி ரூ.350-ல் இருந்து ரூ.420 ஆகவும் அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து வரும் ஸ்டீம் வகை பொன்னி அரிசியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 26 கிலோ ராய்ச்சூர் பொன்னி அரிசி ரூ.1,250-ல் இருந்து ரூ.1,700 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்த ரகத்தில் மட்டும் சுமார் 30 சதவீதம் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

பாசுமதி அரிசியின் விலையும் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 30 கிலோ பாசுமதி அரிசி ரூ.2,200 முதல் ரூ.2,300 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பாசுமதி அரிசி ரூ.70-ல் இருந்து ரூ.85 முதல் ரூ.90 வரை உயர்ந்துள்ளது.

அரிசி விலை உயர்வு காரணமாக வீட்டு பட்ஜெட்டில் கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக தினசரி உணவுக்கான முக்கிய பொருளாக அரிசி இருப்பதால், தொடர்ந்து விலை உயர்ந்தால் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.

எனினும், புதிய நெல் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்துக்குப் பிறகு அரிசி விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை அரிசி விலை எந்த அளவுக்கு உயரும் என்பது நெல் வரத்து மற்றும் அண்டை மாநிலங்களின் விளைச்சலை பொறுத்தே இருக்கும்.

இதையும் படிங்க: சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share