"சட்டமன்றத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு" - முதலமைச்சர் விஜய்க்கு நாதக சீமான் நன்றி!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கும் தனித் தீர்மானத்தை வரவேற்று முதலமைச்சர் விஜய்க்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதன்முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தனித் தீர்மானத்தை முழுமையாக வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்தின் மரபையும் பெருமையையும் காக்கும் வகையில் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கும், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன்; இதற்காகத் தவெக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் எனது நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்.. முதல்வர் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்.. அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்..!!
தமிழ்நாட்டின் அரசு விழாக்களிலும் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும் தாய்மொழித் தமிழின் அடையாளமும், தமிழ்த்தாய் வாழ்த்தின் முதன்மையும் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கப்படக் கூடாது என்பதில் நாம் தமிழர் கட்சி எப்போதும் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் பல்கலைக்கழக விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, சட்டமன்றத்திலேயே அதற்கான சட்டப்பூர்வத் தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மொழியின் உரிமையையும் இறையாண்மையையும் நிலைநிறுத்தும் வகையில் தவெக அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமின்றி, பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ் அமைப்பினரும் தொடர்ச்சியாகத் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முன்னுரிமை..!! ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்..!!