டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. 717 கடைகளில் 462 கடைகள் மூடல்.. அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு மாற்று வழிமுறைகளை ஏற்படுத்த அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கத் தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ளதால், நாளை முதல் பணியாளர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
வரும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாற்று வழிமுறைகளை ஏற்படுத்தித் தர அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கத் தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இதன் காரணமாக நாளை முதல் அனைத்துப் பணியாளர்களும் பணிக்குத் திரும்புவார்கள் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
சில குறிப்பிட்ட பகுதிகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாகத் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டுப் பாதிப்பு ஏற்பட்டது. இச்சிக்கலைத் தீர்க்க, நேற்று ஒரு மாத அவகாசம் கோரி அரசு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று கோட்டையில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் அவசரப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் பணியாளர் முன்னேற்ற சங்கம், மாநில டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம், தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சங்கம், டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி, தமிழக பாட்டாளி டாஸ்மாக் தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் அரசு பணியாளர் நல சங்கம், மேற்பார்வையாளர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் டாஸ்மாக் சங்கம் உள்ளிட்ட 11 பிரதான சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், "மது பாட்டில்களை ஊழியர்களே எடுத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்படுவதில் அரசுக்கும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய கூட்டத்தில் கள சூழ்நிலைகளை அவர்களிடம் விவரித்தோம். தொழிலாளர்கள் மீது அரசுக்கும், அரசு மீது தொழிலாளர்களுக்கும் நம்பிக்கை உள்ளது. இந்த ஒரு மாத கால அவகாசத்திற்குள் மாற்று வழிமுறைகள் சரி செய்யப்படும் எனக் கூறினோம். அதனை ஏற்று, நாளை முதல் அனைத்துத் தொழிலாளர்களையும் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்துவதாகச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை மூடி.. போராட்டத்தில் இறங்கிய பணியாளர்கள்..!! இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் செய்த செயல்..!!
மதுக்கடைகளை மூடும் அரசின் நடவடிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், "தமிழக அரசு முதற்கட்டமாக அறிவித்த 717 மதுக்கடைகளில், தற்பொழுது வரை 462 கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. வரும் வாரத்திற்குள் மீதமுள்ள எஞ்சிய கடைகளும் மூடப்படும். மூடப்பட்ட 717 கடைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாத ஊதியம் எவ்விதத் தொய்வுமின்றி நிச்சயமாகச் சென்று விடும். மேலும், மூடப்பட்ட கடைகளின் பணியாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம், அருகாமையில் உள்ள அதிக அளவில் விற்பனையாகும் கடைகளுக்கு அவர்களை மாற்றிப் பணி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!