டாஸ்மாக் கடைகளை மூடி.. போராட்டத்தில் இறங்கிய பணியாளர்கள்..!! இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் செய்த செயல்..!!
டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பணியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமைச்சர் விக்னேஷ்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் எழுந்து வரும் நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் நேற்று பல மாவட்டங்களில் கடையடைப்பில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்துக்கு ஆளானார்கள்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பொறுப்பேற்றதும், மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரிடமிருந்தும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், அதற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்கள் துறையை சிரமத்துக்கு உள்ளாக்கி வருகின்றன. குறிப்பாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி செயல்படுத்தப்படும் பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2022 மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கிய இந்தத் திட்டம், படிப்படியாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்குப் பரவியது. தற்போது சென்னை, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இது அமலில் உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல நடைமுறை சிரமங்கள் இருப்பதாக ஊழியர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இதையும் படிங்க: "சொன்னத செய்யல"..! பயிர்க்கடன் தள்ளுபடியில் அதிருப்தி..! விவசாயிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
காலி பாட்டில்களை வெளி முகமை மூலம் திரும்பப் பெற வேண்டும் என்பது அவர்களின் முக்கியக் கோரிக்கை. இதை வலியுறுத்தி ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சங்கப் பிரதிநிதிகளை நேரில் அழைத்துப் பேசி, ஊழியர்களின் கோரிக்கைகளை இயன்றவரை நிறைவேற்றுவதாக உறுதியளித்தும் நிலைமை மாறவில்லை.
இந்நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தலையிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் தனது அறிவிப்பில், “உயர்நீதிமன்ற உத்தரவின்படி இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் நிர்வாகத்துக்கு உள்ள பொறுப்பு ஊழியர்களுக்கும் உண்டு. எனவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், ஊழியர்களின் கோரிக்கைக்கு இணங்க வெளி முகமை வழியாக காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் புதிய திட்டத்தை உடனடியாக உருவாக்கி, ஜூன் மாத இறுதிக்குள் உயர்நீதிமன்றத்தில் உறுதிப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்றும், தற்போதைய நடைமுறையை முழுமையாக மாற்றும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஊழியர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து, நிர்வாகத்தின் முயற்சியில் நம்பிக்கை வைத்து பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட்டு, மதுபானக் கடைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவறு நிரூபித்தால் கடும் ஆக்ஷன்..! அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..! போராட்டத்தை கைவிட்ட மாணவிகள்..!!