தலைமுறைகளை செதுக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்... வாட்டி வதைக்காதீர்கள்... சீமான் கண்டனம்...!
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவிப்பதாக சீமான் கூறினார்.
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குரல் கொடுத்துள்ளார். அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயல் என்ற தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர்ச்சியாக திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார்.
10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அதிமுக அரசும், இடைநிலை ஆசிரியரிடையே நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். ஒரே அரசின் நிர்வாகத்தின் கீழ் ஒரே வகையான பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் குறைவான ஊதியம் வழங்குவது எவ்வகையில் நியாயமானதாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.
வழக்கம்போல் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற வாக்குறுதியளித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த திமுக அரசு இன்றுவரை அதனை நிறைவேற்றவில்லை என்பது பெருங்கொடுமை என்றும் ஆசிரியப் பெருமக்கள் தங்கள் வாழ்வாதார அடிப்படை உரிமையைப் பெறவேண்டி கடந்த 15 ஆண்டிற்கும் மேலாகத் தொடரும் இரு திராவிடக் கட்சி அரசுகளின் இத்தகைய பணியாளர் விரோதப் போக்கிற்கு எதிராக எத்தனை அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்... இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு... போராட்டம் தொடரும் என திட்டவட்டம்...!
நாட்டின் வருங்காலத் தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர் பெருமக்களை இனியும் வாட்டி வதைக்காமல், ஊதியப் பாகுபாட்டைக் களைந்து, அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று வலியுறுத்துவதோடு ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஆதரவை தெரிவிப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: ஓய மாட்டோம்... 6வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்... DPI அலுவலகம் முற்றுகை...!