சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!
சென்னை ஐஐடியின் 63-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஜான்சிபார் அதிபர் டாக்டர் ஹூசேன் அலி ம்வின்யி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 3,518 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
சென்னை கிண்டியில் உள்ள புகழ்பெற்ற இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) 63-ஆவது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நடப்பு ஆண்டு விழாவில் கூட்டு மற்றும் இரட்டைப் பட்டங்கள் உட்பட மொத்தம் 3,518 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 511 மாணவர்கள் முனைவர் பட்டங்களையும் (PhD), வெளிநாட்டு நிறுவனங்களுடனான கூட்டு முனைவர் பட்டங்களையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஜான்சிபார் (Zanzibar) அதிபர் டாக்டர் ஹூசேன் அலி ம்வின்யி (Dr. Hussein Ali Mwinyi) கலந்துகொண்டார். அவருடன் சான்சிபாரின் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறை அமைச்சர் லேலா முகமது முசா, இந்தியாவுக்கான தான்சானியா உயர் ஆணையர் அனிசா கபுபி ம்பேகா மற்றும் ஐஐடி இயக்குனர் காமகோடி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
பட்டம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் பட்டங்களையும் வழங்கி வாழ்த்திப் பேசிய ஜான்சிபார் அதிபர் டாக்டர் ஹூசேன் அலி ம்வின்யி, இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் பங்கையும் மனிதகுலத்தின் பொறுப்பையும் உணர்த்தும் வகையில் உரையாற்றினார்:
இதையும் படிங்க: "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!
ஒவ்வொரு தலைமுறையும் இந்த உலகை அது இருக்கும் நிலையிலேயே மரபாகப் பெறுகிறது. ஆனால், இந்த இளம் தலைமுறையினராகிய உங்களுக்கோ, இந்த உலகம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அதனை வடிவமைப்பதற்கான அசாதாரண வாய்ப்பும் பொறுப்பும் கிடைத்துள்ளது. வரலாற்றின் மிகத் தீர்க்கமான தருணத்தில் நீங்கள் பட்டம் பெறுகிறீர்கள்.
செயற்கை நுண்ணறிவு (AI), ரோபாட்டிக்ஸ், உயிரித் தொழில்நுட்பம், குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவை மனிதகுலம் வாழும், கற்கும், வேலை செய்யும் முறையையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்து வருகின்றன. இருப்பினும், தொழில்நுட்பம் மட்டுமே எப்போதும் முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளித்ததில்லை என்பதை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. ஒவ்வொரு சிறந்த கண்டுபிடிப்பும் சமூகத்தில் சமத்துவமின்மையை ஆழப்படுத்தலாம் அல்லது வாய்ப்புகளை விரிவுபடுத்தலாம்; சமூகங்களைப் பிரிக்கலாம் அல்லது ஒன்றிணைக்கலாம். அந்தத் தேர்வு தொழில்நுட்பத்திடம் இல்லை, மாறாக அதனை உருவாக்குபவர்களிடமும் பயன்படுத்துபவர்களிடமும் தான் உள்ளது.
மேலும், ஐஐடி மெட்ராஸ் கல்விச் சிறப்பிற்கு மட்டுமன்றி, அதன் வியக்கத்தக்க ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கலாச்சாரத்திற்காகவும் உலகளவில் முன்மாதிரியாகத் திகழ்கிறது என அவர் மனதாரப் பாராட்டினார்.
ஐஐடி மெட்ராஸ்-ன் முதலாவது சர்வதேச வளாகமாக ஆப்பிரிக்காவின் சான்சிபாரில் கல்வி நிறுவனம் நிறுவப்பட்டிருப்பது குறித்துப் பேசிய அதிபர், "இது வெறும் கல்வி சார்ந்த சாதனையை விட மேலானது. அறிவு எல்லைகளைக் கடந்தது என்பதையும், திறமை என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் முடக்கப்படக் கூடாது என்பதையும் இது பிரதிபலிக்கிறது. சான்சிபார், தான்சானியா, இந்தியா மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அருகருகே அமர்ந்து படித்து, சிறந்து விளங்க வேண்டும் என்ற பொதுவான லட்சியத்தின் மூலம் ஒன்றிணைந்துள்ளனர் என்றார்.
பட்டமளிப்பு விழாவில் ஐஐடி இயக்குனர் காமகோடி சான்சிபார் சர்வதேச வளாகத்தின் சிறப்பான செயல்பாடுகளைப் பட்டியலிட்டார்:
தற்போது சான்சிபார் வளாகத்தில் 130 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 51% மாணவர்கள் தான்சானியாவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் இந்தியா, கென்யா, உகாண்டா, எத்தியோப்பியா, ஜாம்பியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வளாகத்தின் மூலம் முதல் எம்.டெக். (M.Tech) பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் 100 விழுக்காடு தொழில்துறை வேலைவாய்ப்பைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் மாணவர் சேர்க்கையை 350 முதல் 500 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காகத் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் நியமனம், தொழில்துறை கூட்டு ஒப்பந்தங்கள், ஆராய்ச்சி உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் முதலாவது ஆராய்ச்சி ஒருங்கிணைந்த ஸ்டார்ட்அப் ஸ்டூடியோ அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: பட்டா, நில ஆவணங்களில் லஞ்சம்..? களமிறங்கிய அதிகாரிகள்..? வட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்டை..!