"எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது திருவிழா முன்னேற்பாடு கூட்டத்தில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், புதிய கப்பல் கட்டும் தளப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், ஜனநாயகன் படத்தின் வெற்றி குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டு திருவிழா, வரும் ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 10 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான முக்கிய முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காவல்துறை, மாநகராட்சி, வருவாய், சுகாதாரம், தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். திருவிழா நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குமுறை, தடையற்ற குடிநீர் விநியோகம், சுகாதார வசதிகள் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஸ்ரீநாத், விழா முன்னேற்பாடுகள் குறித்துப் பேசியதுடன், தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்தும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்:
இதையும் படிங்க: 30 ஆண்டுகால நாடாளுமன்ற உரைத் தொகுப்பு..! தலைமைச் செயலகத்தில் விஜய் - வைகோ சந்திப்பு..!
பனிமய மாதா பேராலயத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படத் தேவையான முழு உத்தேசங்களும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், எத்தனையோ அரசியல் மற்றும் சட்டப் போராட்டத் தடைகளையும் தாண்டி தற்பொழுது 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் தியேட்டர்களில் எப்படி மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்களோ, அதேபோல் மாண்புமிகு முதலமைச்சரும் நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்தத் திரைப்படம் மக்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாகவும், தவெக அரசின் மிகப்பெரிய வெற்றியாகவும் அமைந்துள்ளது."
தூத்துக்குடியில் உப்புக்களம் மற்றும் கொப்பளத் தொழிலை அழித்துவிட்டுப் புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்குப் பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர்கள் தரப்பில் தொடர் எதிர்ப்புகள் கிளம்பி வருவது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஸ்ரீநாத், "தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாகத் தற்பொழுது பல்வேறு கட்ட விரிவான ஆய்வுகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகின்றன. மக்கள் நலன் மற்றும் தொழில் வளர்ச்சியை மனதில்கொண்டு, விரைவில் அதற்கான கட்டுமானப் பணிகள் முறைப்படி தொடங்கும்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக-வில் இணைந்ததும் அதிரடி ட்விஸ்ட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான தேர்தல் வழக்கு வாபஸ்!