தமிழகத்தில் அதிகரிக்கும் டீன்ஏஜ் கர்ப்பம்! சிக்கலாகும் பெண் குழந்தைகள் வாழ்க்கை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
தமிழகத்தில் பதின்ம வயதில் (19 வயதிற்குட்பட்ட சிறுமிகள்) கர்ப்பமடைவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக உயர்ந்து வருவதாகத் தமிழகப் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 19 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமடையும் சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் மருத்துவ வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவப் பதிவுகள் மற்றும் சுகாதாரத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களிடையே கர்ப்ப விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் பதின்ம வயது கர்ப்பம் ஒரு முக்கிய பொதுச்சுகாதார சவாலாகக் கருதப்படும் நிலையில், தமிழகத்திலும் இந்தப் பிரச்சினை கவனிக்க வேண்டிய அளவுக்கு வளர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பதின்ம வயதில் கர்ப்பமடையும் பெண்களுக்கு பல்வேறு உடல்நல ஆபத்துகள் ஏற்படுகின்றன. அந்த வயதில் உடல் முழுமையாக வளர்ச்சி அடையாத காரணத்தால் கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின்போதும் சிக்கல்கள் உருவாகும் அபாயம் அதிகம். குறிப்பாக இடுப்பு எலும்பு மற்றும் கர்ப்பப்பை முழுமையான வளர்ச்சியை எட்டாத நிலையில் இருப்பதால் தாயின் உடல்நலத்திற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தாய் மற்றும் சேய் இறப்பு அபாயமும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: இனி சார்பதிவாளர் அலுவலகம் போக தேவையில்லை! வருகை இல்லா ஆவண பதிவு விரைவில் கட்டாயம்!
இந்த நிலை அதிகரிப்பதற்கு குழந்தைத் திருமணங்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்க நலக் கல்வி குறித்த விழிப்புணர்வு பற்றாக்குறை, சமூக மற்றும் பொருளாதார காரணிகள், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் பொறுப்பற்ற பயன்பாடு போன்றவை முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இந்தச் சிக்கலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல், வளரிளம் பருவ நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு முகாம்களை அதிகரித்தல், கிராமப்புறங்களில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க கண்காணிப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
விழிப்புணர்வு குறைபாடு மற்றும் சமூகச் சூழ்நிலைகளால் தமிழகத்தில் பதின்ம வயது கர்ப்பங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதைத் தடுக்க அரசு, பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!