“இனி படியில் தொங்கினால்..” - சொல் பேச்சு கேட்காத பள்ளி சில்வண்டுகளுக்கு ஆப்பை இறங்கிய நீதிமன்றம்...!
மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம்
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் 1முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் படி 2024-2025 கல்வியாண்டில் மொத்தம் 23,49,616 பள்ளி மாணவர்களுக்கும் சுமார் 2,00,000 கல்லூரி மாணவர்களுக்கும் கட்டணமில்லா பயணத்திற்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகளில் மாணவர்கள் செல்லும் போது புத்தகப்பை மற்றும் உணவுப் பைத் கொண்டு செல்வதால் பேருந்தினுள் கூட்ட நெருக்கடியில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
கூட்ட நெருக்கடியால் மாணவ மாணவியர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணலாம். சில நேரங்களில் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது. ஆகவே,
மாணவ மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வண்ணம், நெருக்கடி மிகுந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக தனிப் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: விஜய் எங்க அப்பா..!! கொச்சையாக பேசிய வேல்முருகன்.. மாணவியின் சாட்டையடி பதில்..!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, "பிள்ளைகளை அறிவுறுத்தி வளர்க்க வேண்டியதில் பெற்றோரின் கடமை உள்ளது. பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு மாணவர்கள் ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. மாணவியர் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. நடத்துனர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்பதில்லை. அது தண்டனைக்குரிய குற்றம். காவல்துறையினர் வழக்கு பதிவு கூட செய்யலாம். ஆகவே மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: ஒரே சாக்கடை தண்ணி.. கொசு தொல்லை.. மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!